Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ அண்ணாமலை எச்சரிக்கையால் நெருக்கடி கோவையில் துாய்மை பணியாளர்கள் கைது

அண்ணாமலை எச்சரிக்கையால் நெருக்கடி கோவையில் துாய்மை பணியாளர்கள் கைது

அண்ணாமலை எச்சரிக்கையால் நெருக்கடி கோவையில் துாய்மை பணியாளர்கள் கைது

அண்ணாமலை எச்சரிக்கையால் நெருக்கடி கோவையில் துாய்மை பணியாளர்கள் கைது

ADDED : ஜூன் 15, 2025 01:18 AM


Google News
Latest Tamil News
கோவை:'கோவையில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்களுக்கு, ரூ.770 தினக்கூலி வழங்குவது தொடர்பாக, இரு நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்தா விட்டால், அவர்களுடன் இணைந்து போராடுவேன்' என, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியிருந்ததால், முன்னெச்சரிக்கையாக துாய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டனர்.

கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த துாய்மை பணியாளர்கள், கொசு ஒழிப்பு பணியாளர்கள் மற்றும் சாக்கடை அடைப்பு நீக்கும் பணியாளர்களுக்கு, கலெக்டர் நிர்ணயித்த தினக்கூலி ரூ.770 வழங்கக்கோரி, காத்திருப்பு வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.

நேரில் வந்து ஆதரவு கொடுத்த, பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, 'இரு நாட்களுக்குள் தீர்வு ஏற்படுத்தாவிட்டால், போராட்டத்தில் பா.ஜ., இணையும்; நானும் பங்கேற்பேன்' என அறிவித்திருந்தார். அ.தி.மு.க., மாநகர் மாவட்ட செயலாளர் அம்மன் அர்ஜூனன், ஆதரவு கொடுத்தார்.

அரசியல் ரீதியாக போராட்டம் திசை திரும்பியதால், மாநகராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு நெருக்கடி ஏற்பட்டது. வார்டு வாரியாக துாய்மை பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுத்து, 'இனி, போராட்டத்தில் பங்கேற்க மாட்டேன்' என எழுதி வாங்கிக் கொண்டு, நேற்று பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.

ஆறு நாட்களாக போராட்டம் நடந்த கலெக்டர் அலுவலகம் முன், போலீஸ் உதவி கமிஷனர் தலைமையில் நான்கு இன்ஸ்பெக்டர்கள், எட்டு சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும், 50 போலீசார் மற்றும் உளவுத்துறை போலீசார் நிறுத்தப்பட்டனர்.

ஏழாம் நாளாக போராட்டம் நடத்த, அவ்விடத்துக்கு துாய்மை பணியாளர்கள் நேற்று வர ஆரம்பித்ததும், கூட்டமாக சேர விடாமல் கைது செய்யப்பட்டனர். நான்கு பேர் வந்தாலும் மண்டபத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டனர்.

இதையடுத்து, தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தெற்கு தாலுகா அலுவலகம் முன் அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில், 16ம் தேதி (திங்கட்கிழமை) காலை, 11:00 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் ஸ்டேஷனில் விண்ணப்பிக்கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க, அரசியல் கட்சியினருக்கு அழைப்பு விடுத்துள்ளனர். பா.ஜ., முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us