ADDED : ஜன 07, 2024 12:11 AM
'தெய்யம்' என்பது கேரள மாநிலம், மலபார் பகுதியில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டுவரும் புகழ்பெற்ற நாட்டுப்புற கலை. கிராம கோவில்கள் அருகிலுள்ள திறந்தவெளியில் கொண்டாடப்படும் தெய்யம் விழாவில் நடனக் கலைஞர்கள் பாரம்பரிய உடை, தலைக்கவசம், பல்வேறுவிதமான ஒப்பனைகளுடன் நடனமாடுவர். கையில் வாள், கேடயம், இடுப்பில் அலங்கார பேண்ட் அணிந்து நெருப்புடன் இவர்கள் ஆடும் நடனம், சர்வதேச அளவில் கவனம் பெறுகிறது.
குறிப்பாக, கோழிக்கோடு மற்றும் கண்ணுாரில் இந்த திருவிழா பிரபலம். இரவு பகலாக நடக்கும் தெய்யம் திருவிழாவை காண சுற்றுவட்டார மக்கள் படையெடுக்கின்றனர். தெய்யம் நடன கலைஞர்கள், இறையருளால் தங்களை தெய்வமே ஆட்டுவிப்பதைப் போன்ற எண்ணத்துடன் மெய்மறந்து ஆடுகின்றனர். கந்தனற்கேளான் தெய்யம், முத்தப்பன், கந்த கர்ணன், குளிகன், விஷ்ணு மூர்த்தி, சாமுண்டி, பகவதி, வயநாட்டுக் குலவன், குட்டிச்சாத்தான் உள்ளிட்ட பல்வேறு ஒப்பனைகளை இவர்கள் எடுக்கின்றனர்.
இவ்வாண்டுக்கான விழா கடந்த டிசம்பரில் துவங்கியது; வரும் ஏப்ரல் வரை நடக்கிறது. தற்போது மிக விமரிசையாக நடந்து கொண்டிருக்கும் இவ்விழா வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மட்டுமின்றி, புகைப்படக் கலைஞர்களும் 'நல்ல வேட்டை'தான்.
'காந்தாரா' தமிழ் திரைப்படம் வெளியானபின், இவ்விழாவிற்கு தமிழகத்திலிருந்தும் அதிக பார்வையாளர்கள் வருவதாக விழா குழுவினர் தெரிவிக்கின்றனர். இந்த பக்கத்தில் இடம்பெற்றிருக்கும் படங்கள் கோழிக்கோடு, கொயிலாண்டியிலுள்ள கிடாரம் தலச்சிலோன் தேவி கோவில் விழாவில் எடுக்கப்பட்டவை.