Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தவறான சிகிச்சையால் பெண் பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

தவறான சிகிச்சையால் பெண் பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

தவறான சிகிச்சையால் பெண் பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

தவறான சிகிச்சையால் பெண் பலி: ரூ.20 லட்சம் இழப்பீடு தர உத்தரவு

ADDED : ஜூலை 07, 2024 12:41 AM


Google News
கோவை:தவறான சிகிச்சையால் பெண் பலியானதற்கு, 20 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, தனியார் மருத்துவமனைக்கு, நுகர்வோர் குறைதீர் ஆணையம் உத்தரவிட்டது.

கோவையிலுள்ள தமிழ்நாடு மின்வாரிய அலுவலகத்தில் பணியாற்றி வருபவர் சாய்பிரேமன். இவரது மனைவி ராஜலட்சுமி கடந்த 2018, ஜன., 8ல், பேரூர் அருகே ஸ்கூட்டியில் சென்ற போது நாய் குறுக்கே சென்றதால், ரோட்டில் கீழே விழுந்தார்.

அதில், அவரது பல் தாடை எலும்பு உடைந்ததால், பல் முக அறுவை சிகிச்சை செய்ய, மேட்டுப்பாளையம் ரோட்டிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அறுவை சிகிச்சைக்கு முன், அவருக்கு ரத்தம் செலுத்தப்பட்டது.

ரத்தம் செலுத்திக் கொண்டிருக்கும் போதே, அவருக்கு அதிக காய்ச்சல் ஏற்பட்டது. இதனால் ரத்தம் செலுத்துவதை நிறுத்தினர். காய்ச்சலுக்கு சிகிச்சை அளித்த சில மணி நேரத்தில், அவரது உடல் நிலை மிகவும் மோசமடைந்து இறந்தார்.

புகாரின் பேரில், பேரூர் போலீசார் வழக்கு பதிந்து, சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அரசு மருத்துவர்பரிசோதனை செய்த போது, பொருந்தாத ரத்தத்தை செலுத்தியதால், நுரையீரல்பாதிக்கப்பட்டு ராஜலட்சுமி இறந்தது தெரிய வந்தது. தவறான சிகிச்சை காரணமாக ராஜலட்சுமி இறந்ததால், தனியார் மருத்துவமனை மருத்துவர்கள் ஆன்டனி, தமிழ் செல்வன்,பல் மருத்துவர் அருண்குமார் ஆகியோர் இழப்பீடு வழங்க கோரி, கோவை நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் சாய்பிரேமன் வழக்கு தாக்கல் செய்தார்.

விசாரித்த ஆணைய தலைவர் தங்கவேல் மற்றும் உறுப்பினர்கள் மாரிமுத்து, சுகுணா பிறப்பித்த உத்தரவில், 'தனியார் மருத்துவமனை மற்றும் மருத்துவர்கள், பணியில் அலட்சியமாக செயல்பட்டதால், மனுதாரரின் மனைவி இறந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது. எதிர் மனுதாரர்கள் சேவை குறைபாடு செய்ததால், மனுதாரருக்கு இழப்பீடாக, 20 லட்சம் ரூபாய், செலவு தொகை, 5,000 ரூபாய் வழங்க வேண்டும்' என தெரிவித்துள்ளனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us