Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ பிளம்பரை தி.மு.க., கவுன்சிலர் மிரட்டியது ஏன்? பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில் சர்ச்சை

பிளம்பரை தி.மு.க., கவுன்சிலர் மிரட்டியது ஏன்? பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில் சர்ச்சை

பிளம்பரை தி.மு.க., கவுன்சிலர் மிரட்டியது ஏன்? பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில் சர்ச்சை

பிளம்பரை தி.மு.க., கவுன்சிலர் மிரட்டியது ஏன்? பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவதில் சர்ச்சை

ADDED : ஜூலை 07, 2024 11:32 PM


Google News
கோவை;கோவை மாநகராட்சி, 76வது வார்டில் பாதாள சாக்கடை இணைப்பு வழங்குவது தொடர்பாக, தி.மு.க., கவுன்சிலருக்கும், பிளம்பர்களுக்கும் இடையே உரசல் ஏற்பட்டிருக்கிறது. இதுகுறித்து, துணை கமிஷனர், மண்டல உதவி கமிஷனர் ஆகியோர் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்க, மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உத்தரவிட்டுள்ளார்.

கோவை மாநகராட்சியில் பாதாள சாக்கடை இணைப்பு பெற வேண்டுமெனில், மண்டல அலுவலகத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அதற்குரிய கட்டணம் செலுத்திய பின், உரிமம் பெற்ற பிளம்பர்கள் மூலமாக, இணைப்பு வழங்குவது நடைமுறை.

தெற்கு மண்டலம், 76வது வார்டுக்கு உட்பட்ட வாசவி கார்டன் பகுதியில், தி.மு.க., கவுன்சிலர் ராஜ்குமார், மாநகராட்சி விதிமுறையை மீறி, பாதாள சாக்கடை வீட்டு இணைப்பு வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது.

அதாவது, வீட்டு உரிமையாளர்களிடம் குறிப்பிட்ட தொகையை பெற்றுக்கொண்டு, மாநகராட்சிக்கு செலுத்தாமல், பாதாள சாக்கடை மேனுவல் பகுதியில் இருந்து, வீட்டுக்கு குழாய் இணைப்பு வழங்குவதாக, மாநகராட்சி உதவி பொறியாளர்களிடம் பிளம்பர்கள் புகார் கூறியுள்ளனர்.

புகார் கூறிய பிளம்பர் ஒருவரை, கவுன்சிலர் ராஜ்குமார் மொபைல்போனில் அழைத்து மிரட்டியுள்ளார். அந்த ஆடியோ சமூக வலைதளத்தில் வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக, கவுன்சிலர் ராஜ்குமாரிடம் கேட்டதற்கு, ''பிளம்பர்கள் வேண்டுமென்றே பரப்பி விடுகின்றனர். வாசவி கார்டன், சோமு நகர் பகுதியில் புதிதாக தார் ரோடு போடப்போகிறோம். அதற்கு முன், பாதாள சாக்கடை இணைப்பு வழங்க வேண்டும். வார்டுக்கு ஒதுக்கும் நிதியில், தற்போது 'டம்மி'யாக குழாய் மட்டும் பதிக்கப்படுகிறது. வீட்டு இணைப்பு வழங்கவில்லை; அந்த குழாயில் கழிவு நீர் வராது,'' என்றார்.

மாநகராட்சி உதவி பொறியாளர் கோபாலகிருஷ்ணனிடம் கேட்டதற்கு, ''76வது வார்டு, வாசவி கார்டனில் ரோடு போடுவதற்கு, நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. வார்டு நிதியில் பாதாள சாக்கடை மேனுவல் கட்டப்பட்டுள்ளது.

ரோடு போடுவதற்கு முன், ஒவ்வொரு வீட்டுக்கும் சுற்றுச்சுவர் வரை குழாய் பதிக்க கவுன்சிலர் அறிவுறுத்தினார். அதற்கான தொகை, வார்டு நிதி பெற்றுத்தரப்படும் என கூறியிருக்கிறார்.

வார்டு நிதி கிடைக்காவிட்டாலும், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் தருவதாக கூறியிருக்கின்றனர். மாநகராட்சிக்குரிய கட்டணம் செலுத்தியதும், வீட்டு இணைப்பு வழங்கப்படும். முறைகேடாக இணைப்பு ஏதும் வழங்கவில்லை,'' என்றார்.

கேட்டுள்ளேன்'

மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரனிடம் விளக்கம் கேட்டதற்கு, ''முறைகேடாக பாதாள சாக்கடை இணைப்பு வழங்கப்படுகிறதா என, துணை கமிஷனர் சிவக்குமார், தெற்கு மண்டல உதவி கமிஷனர் (பொ) முருகேசன் ஆகியோர் விசாரித்து, அறிக்கை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us