Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ போஸ்டர் ஒட்டுவதில் யார் கெத்து; மேம்பால துாண்கள் அலங்கோலம்

போஸ்டர் ஒட்டுவதில் யார் கெத்து; மேம்பால துாண்கள் அலங்கோலம்

போஸ்டர் ஒட்டுவதில் யார் கெத்து; மேம்பால துாண்கள் அலங்கோலம்

போஸ்டர் ஒட்டுவதில் யார் கெத்து; மேம்பால துாண்கள் அலங்கோலம்

ADDED : மார் 14, 2025 10:32 PM


Google News
Latest Tamil News
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு சர்வீஸ் ரோட்டில் உள்ள மேம்பால தூண்களில், போஸ்டர் ஒட்டுவதில் கட்சியினருக்குள் பனிப்போர் நிலவுகிறது.

கிணத்துக்கடவு மேம்பால தூண்கள், புது பஸ் ஸ்டாண்ட், பழைய பஸ் ஸ்டாப் பகுதியில் உள்ள கடைகள், அரசு அலுவலக சுற்று சுவர் உள்ளிட்ட இடங்களில், கட்சி, அமைப்பு மற்றும் தனியார் விளம்பர போஸ்டர்கள் ஒட்டப்படுவது வழக்கம். இதில், அதிக அளவு மேம்பால தூண்களில் ஒட்டப்படுகிறது.

அரசியல் கட்சிகளுக்குள் போஸ்டர் ஒட்டுவதில் அடிக்கடி பனிப்போர் நிலவுகிறது. இதில், பெரும்பாலும் தி.மு.க., மற்றும் அ.தி.மு.க., என இரு கட்சியினருக்குள் போஸ்டர் ஒட்டுவதில் பிரச்னைகள் ஏற்படுகிறது.

கட்சி தலைவரின் பிறந்தநாள் விழா குறித்த போஸ்டர் மேம்பால தூண்களில் ஒரு கட்சியினர் ஒட்டியிருந்தால், அடுத்த நாளே மற்றொரு கட்சியினர் அந்த போஸ்டர் மீது தனது விளம்பரத்தை ஒட்டி செல்கின்றனர். இரு கட்சிகளும் மாறி மாறி போஸ்டர் மீது போஸ்டர் ஒட்டிக் கொண்டே இருப்பதால், வாக்குவாதமும், மோதலும் ஏற்படுகிறது.

மக்கள் கூறியதாவது:

மேம்பால தூண்களில் போஸ்டர் ஒட்டுவது அதிகரித்து வருகிறது. கட்சி மட்டுமின்றி தனியார் விளம்பர போஸ்டர்களும் ஒட்டப்படுகிறது. மேம்பாலம் பயன்பாட்டுக்கு வந்தவுடன், தூண்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது என அறிவிப்பு இருந்தும், அந்த அறிவிப்பை மறைத்தே போஸ்டர் ஒட்டுகின்றனர். இதை அவ்வப்போது தேசிய நெடுஞ்சாலை துறையினர் கவனித்து அகற்றி வருகின்றனர். ஆனாலும், மீண்டும் அதே வேலையில் கட்சியினர் ஈடுபடுகின்றனர். இதனால், மேம்பால துாண்கள் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

இதை தவிர்க்க, நெடுஞ்சாலை துறை சார்பில் தூண்களில் மக்கள் விழிப்புணர்வு சார்ந்த ஓவியம் அல்லது முக்கிய தகவல்களை இடம்பெறச் செய்ய வேண்டும்.

இவ்வாறு, கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us