Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கொலை செய்ய சென்ற ரவுடிகள் துப்பாக்கி, கத்தியுடன் சிக்கினர்

கொலை செய்ய சென்ற ரவுடிகள் துப்பாக்கி, கத்தியுடன் சிக்கினர்

கொலை செய்ய சென்ற ரவுடிகள் துப்பாக்கி, கத்தியுடன் சிக்கினர்

கொலை செய்ய சென்ற ரவுடிகள் துப்பாக்கி, கத்தியுடன் சிக்கினர்

ADDED : ஜூன் 26, 2024 02:37 AM


Google News
Latest Tamil News
கோவை;கொலை செய்வதற்காக துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு சென்ற ஆறு பேர் போலீசாரிடம் சிக்கினர்.

கோவை, செல்வபுரம் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட சொக்கம்புதூர், மயானம் அருகே உள்ள முத்தண்ணன் குளம் செல்லும் சாலையில், நேற்றுமுன்தினம் அதிகாலை போலீசார், வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

அவ்வழியாக, இருசக்கர வாகனத்தில் வந்த மூவர், நிறுத்தாமல் சென்றனர். போலீசார் அவர்களை துரத்தி பிடித்து, விசாரணை செய்தபோது, மூவரும் செல்வபுரத்தை சேர்ந்த சஞ்சய் குமார்,24, தீத்திபாளையத்தை சேர்ந்த ஜலாலுதீன்,50, இடையர்பாளையத்தை சேர்ந்த சரவணகுமார்,40 என்பது தெரிய வந்தது.

அவர்களை சோதனை செய்த போது, சஞ்சய்குமாரின் இடுப்பில், தோட்டா இல்லாத துப்பாக்கியும், இருசக்கர வாகனத்தில் கத்தியும் இருந்தது.

விசாரணையில், அவர்கள் கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது:

நாங்கள் சஞ்சய் ராஜா கேங்கை சேர்ந்தவர்கள். எங்கள் குரூப்பில் எங்களுக்கு எதிராக வேலை செய்த, சத்தியபாண்டியன் என்பவரை ஏற்கனவே கொலை செய்து விட்டோம். பசும்பொன் குமார் என்பவரை, கொலை செய்ய திட்டமிட்டிருந்தோம்.

இதற்காக, நாங்கள் மூவரும், சஞ்சய்ராஜா, காஜாஉசேன், சல்புன்கான் ஆகியோருடன் சேர்ந்து, கடந்தாண்டு, காஜா உசேனின் தந்தையான ஜலாலுதீனிடம் துப்பாக்கி கொடுத்து வைத்திருந்தோம்.

தற்போது, அந்த துப்பாக்கியை வாங்கிக்கொண்டு, பசும்பொன் குமாரை தேடிப்பிடித்து துப்பாக்கி காட்டி மிரட்டி, ஒதுக்குப்புறமான இடத்திற்கு கொண்டு சென்று, கொலை செய்ய சென்று கொண்டிருந்தோம். அப்போது சிக்கி விட்டோம்.

இவ்வாறு, அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, செல்வபுரம் போலீசார், சஞ்சய் குமார், ஜலாலுதீன், சரவணகுமார் ஆகிய மூவரையும் கைது செய்தனர். அவர்கள் அளித்த தகவலின்பேரில், வேறு இடத்தில் பதுங்கியிருந்த சல்புல்கானையும், கைது செய்தனர்.

தொடர்ந்து, சதித்திட்டத்தை அமல்படுத்த முயன்ற சஞ்சய்குமார், ஜலாலுதீன், சரவணகுமார், சல்புல்கான் மற்றும் சதித்திட்டத்தில் தொடர்புடைய சஞ்சய் ராஜா, காஜா உசேன் என, மொத்தம் ஆறு பேர் மீது, சதி திட்டம் தீட்டுதல், சட்ட விரோதமாக ஆயுதங்கள் வைத்திருத்தல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, துப்பாக்கி மற்றும் கத்திகளை பறிமுதல் செய்தனர்.

இவ்வழக்கில், சஞ்சய்குமார், ஜலாலுதீன், சரவணகுமார், சல்புல்கான் ஆகிய நான்கு பேரையும், போலீசார் சிறையில் அடைத்தனர். மேலும் இரண்டு குற்றவாளிகளான சஞ்சய் ராஜா, காஜா உசேன் ஆகிய இருவரும், ஏற்கனவே, வேறொரு வழக்கில் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் உள்ளனர்.

இவ்விருவரையும் கைது செய்ய கோவை போலீசார், இன்று கடலூர் சிறைக்கு செல்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us