/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ 100 அடியை தொட்டது சோலையாறு! மெல்ல உயரும் பரம்பிக்குளம் 100 அடியை தொட்டது சோலையாறு! மெல்ல உயரும் பரம்பிக்குளம்
100 அடியை தொட்டது சோலையாறு! மெல்ல உயரும் பரம்பிக்குளம்
100 அடியை தொட்டது சோலையாறு! மெல்ல உயரும் பரம்பிக்குளம்
100 அடியை தொட்டது சோலையாறு! மெல்ல உயரும் பரம்பிக்குளம்
ADDED : ஜூன் 27, 2024 09:47 PM

பொள்ளாச்சி : வால்பாறை அருகே உள்ள, சோலையாறு அணைக்கு தொடர் நீர் வரத்தால் நீர்மட்டம், 100 அடியை தொட்டதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
பி.ஏ.பி., திட்டத்தின் முக்கிய அணையான சோலையாறு அணை வால்பாறை அருகே உள்ளது.
மொத்தம், 160 அடி உயரமுள்ள சோலையாறு அணையின் நீர்பிடிப்பு பகுதி, 37 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்டது. இந்த அணையில், அதிகபட்சமாக, 165 அடி வரை நீர் இருப்பு வைக்க முடியும்.
வால்பாறை மலைப்பகுதியில் கடந்தாண்டு பருவமழை சரிவர பெய்யாததால், அணை நீர்மட்டம் சரிந்தது. இந்நிலையில், சில நாட்கள் தொடர் மழையால், சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்றுமுன்தினம், 13 அடி உயர்ந்து, 86.20 அடியாக இருந்தது. நேற்று நிலவரப்படி சோலையாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பால், 14 அடி உயர்ந்து, 100 அடியை தொட்டது. வினாடிக்கு, 5,705.32 கனஅடி நீர் வரத்து உள்ளது.
டாப்சிலிப் அடுத்துள்ள, பரம்பிக்குளம் நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர் மழை காரணமாக, அணை நீர்மட்டம் மெல்ல உயரத்துவங்கியுள்ளது. மொத்தம் உள்ள, 72 அடி உயரத்தில், 15.50 அடிக்கு நீர்மட்டம் உயர்ந்தது. வினாடிக்கு, 3,337 கனஅடி நீர் வரத்து உள்ளது. வினாடிக்கு, 157 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தொடர் மழை மற்றும் சோலையாறு அணையில் இருந்து நீர்வரத்து அதிகரித்தால், பரம்பிக்குளம் அணை முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நேற்று காலை, 8:00 மணி வரை பதிவான மழையளவு (மி.மீ.,) வருமாறு:
சோலையாறு - 47, பரம்பிக்குளம் - 27, ஆழியாறு - 2.6, வால்பாறை - 72, மேல்நீராறு -92, கீழ்நீராறு - 64, காடம்பாறை - 11, சர்க்கார்பதி - 18, வேட்டைக்காரன்புதுார் - 5, மேல்ஆழியாறு - 1, நவமலை - 2, சுல்தான்பேட்டை - 2 என்ற அளவில் மழையளவு பதிவானது.
குளுகுளு சீதோஷ்ணம்
பொள்ளாச்சி, ஆனைமலை நகரப்பகுதியிலும், வால்பாறை மலைப்பகுதியிலும், தொடர் மழை பெய்து வருவதால், சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
சில்லென்ற காற்றுடன் மழையும் பெய்து வருவதால், மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தொடர் மழை பெய்தால் நிலத்தடி நீர்மட்டம் உயரும். விவசாயம் செழிக்கும் என, விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.