/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கோவையின் புதிய மேயர் தேர்வு தாமதம்: ஜாதி பின்னணியை அலசுவதால் குழப்பம்கோவையின் புதிய மேயர் தேர்வு தாமதம்: ஜாதி பின்னணியை அலசுவதால் குழப்பம்
கோவையின் புதிய மேயர் தேர்வு தாமதம்: ஜாதி பின்னணியை அலசுவதால் குழப்பம்
கோவையின் புதிய மேயர் தேர்வு தாமதம்: ஜாதி பின்னணியை அலசுவதால் குழப்பம்
கோவையின் புதிய மேயர் தேர்வு தாமதம்: ஜாதி பின்னணியை அலசுவதால் குழப்பம்
ADDED : ஜூலை 10, 2024 04:07 PM

கோவை : கோவைக்கான புதிய மேயர் யார் என்கிற தேர்வுக்கு பின்னணியில், கவுன்சிலர்களின் ஜாதியை அலசுவதால் அறிவிப்பு தாமதமாகி வருவதாக, தி.மு.க.,வினர் தெரிவிக்கின்றனர்.
கோவை மாநகராட்சி மேயராக இருந்த, 19வது வார்டு (தி.மு.க.,) கவுன்சிலர் கல்பனா, தனது உடல்நிலை மற்றும் மருத்துவ காரணங்களை கூறி, பதவியை ராஜினாமா செய்தார். அவரது விலகல் மாமன்ற கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றி, மாவட்ட நிர்வாகத்துக்கு அனுப்பப்பட்டது. மாவட்ட நிர்வாகத்தில் இருந்து, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்துக்கு, 'கோவை மாநகராட்சி மேயர் பதவி (பெண்களுக்கான ஒதுக்கீடு) காலியாக இருக்கிறது' என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.
தேர்வு எப்போது
தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'மாநிலம் முழுவதும் எந்தெந்த உள்ளாட்சி அமைப்புகளில் எந்தெந்த பதவி காலியாக இருக்கிறதென, ஒவ்வொரு மாதமும், 11ம் தேதி, தேர்தல் ஆணையத்தில் இருந்து அரசுக்கு தெரியப்படுத்தப்படும். கோவை மேயர் பதவி காலியாக இருப்பது தொடர்பாக, நாளை(ஜூலை 10), அரசுக்கு முறைப்படி தெரிவிக்கப்படும்.
பின், மறைமுக தேர்தல் நடத்துவதற்கான தேதி அறிவிக்கப்பட்டு, புதிய மேயர் தேர்வு செய்யப்படுவார். புதிய மேயரை தேர்வு செய்வதற்கு முன், மன்ற கூட்டம் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் , துணை மேயர் தலைமையில் நடத்தலாம். அவர், மேயராக செயல்பட முடியாது. மேயருக்கான இருக்கையிலும் அமர முடியாது; மேயர் அங்கி அணியக்கூடாது. துணை மேயருக்கு கூடுதல் அதிகாரம் வழங்க வேண்டுமெனில், சட்டத்திருத்தம் செய்ய வேண்டும். அதற்கான சாத்தியக்கூறுகள் எழவில்லை' என்றனர்.
ஜாதி பின்புலம்
இந்நிலையில், அடுத்த மேயர் யார் என்கிற சஸ்பென்ஸ் நீடிப்பதால், பதவியை கைப்பற்ற தி.மு.க., பெண் கவுன்சிலர்களுக்குள், பலத்த போட்டி ஏற்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது: புதிய மேயர் தேர்ந்தெடுக்க, ஜாதி பின்புலத்தை அலசுவதால், குழப்பமான சூழல் உருவாகியிருக்கிறது. கோவையில் பெரும்பான்மையாக உள்ள இரு ஜாதியினர், பல்வேறு பதவிகளில் இருப்பதால், இதர ஜாதியினரில் ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்தது. கவுன்சிலர்களின் பின்புலம், உளவுத்துறையினர் மூலம் கேட்டறியப்பட்டுள்ளது.
மாநகராட்சி பகுதியில் தேவர் சமுதாயத்தைச் சேர்ந்த, 1.5 லட்சம் மக்கள் வசிப்பதால், அச்சமுதாயத்தை சேர்ந்தவருக்கு பிரதிநிதித்துவம் கொடுக்க வேண்டும் என்கிற எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது. இச்சூழலில், குறிப்பிட்ட இரண்டு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள், லோக்சபா தேர்தலில் பா.ஜ.,தலைவர் அண்ணாமலைக்கு அதிகமாக ஓட்டு அளித்திருக்கின்றனர். அவர்களை புறக்கணித்தால், 2026 சட்டசபை தேர்தலில் பாதிப்பு ஏற்படக்கூடும். அதனால், அவ்விரு சமுதாயத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரையே, தேர்ந்தெடுக்க வேண்டும் என கூறி, கட்சி தலைமையை குழப்பியுள்ளனர்.
யாராக இருந்தாலும் பொம்மை மேயராக இல்லாமல், கல்வியறிவு, கட்சியினருடன் அணுகும் தன்மை, நிர்வாகத்திறமை, அதிகாரிகளுடன் இணக்கம் மற்றும் வேலைவாங்கும் திறனுள்ள ஒருவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறோம். இவ்வாறு, அவர்கள் கூறினர்.