ADDED : ஜூலை 30, 2024 11:08 PM
போலீசாரிடம் வாலிபர் தகராறு
சுங்கம் பைபாஸ் ரோட்டில் உக்கடம் போலீசார் ரோந்து சென்றனர். மின் வாரிய அலுவலகம் அருகே குடிபோதையில் வாகனம் ஓட்டியமைக்காக ஏற்கனவே வழக்கு பதியப்பட்ட, உக்கடம், ஜி.எம்., நகரை சேர்ந்த முகமது நஸ்ருதின்,24, என்பவர் ரோந்து வாகனத்தை மறித்து போலீசாரை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், போலீசாரை பணி செய்யவிடாது மிரட்டியும் உள்ளார். இதுகுறித்து, போலீசார் வழக்கு பதிந்து முகமது நஸ்ருதினை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கத்தியை காட்டி மிரட்டல்
புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் தினேஷ்,36. இவர் காந்திபுரத்தில் தங்கி தள்ளுவண்டியில் நிலக்கடலை வியாபாரம் செய்துவருகிறார். காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டில் இவர் நிலக்கடலை வியாபாரம் செய்துகொண்டிருந்தபோது, ராம் நகரை சேர்ந்த விஜய் ஆண்டனி,26, என்பவர் மது அருந்த பணம் கேட்டுள்ளார். பணம் தரமறுத்த தினேஷிடம் கத்தியை காட்டி மிரட்டி ரூ.500ஐ பறித்து தப்பினார். தினேஷ் அளித்த புகாரின் பேரில் காட்டூர் போலீசார் வழக்கு பதிந்து விஜய் ஆண்டனியை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
லேப்டாப் திருட்டு
மாதம்பட்டி, செல்லப்பகவுண்டன் புதுாரை சேர்ந்தவர் ஆகாஷ்குமார்,22. சிவில் இன்ஜினியரான இவர் வனக்கல்லுாரி அருகே கட்டுமான பணிகள் மேற்கொண்டுவருகிறார். கடந்த, 26ம் தேதி இரவு, 10:00 மணிக்கு பணிகளை முடித்துவிட்டு ஆகாஷ்குமார் வீட்டுக்கு சென்றார். தொடர்ந்து, 11:15 மணிக்கு அலுவலகத்தில் இருந்த லேப்டாப், செல்போன்கள் காணாமல் போனதாக, கட்டுமான பணியாளர் ஒருவர் தகவல் அளித்துள்ளார். ஆகாஷ்குமார் அலுவலகத்துக்கு விரைந்து பார்வையிட்டபோது பொருட்கள் திருடுபோனது தெரிந்தது. புகாரின் பேரில் சாய்பாபாகாலனி போலீசார் 'சிசிடிவி' உதவியுடன் விசாரிக்கின்றனர்.
புகையிலை பொருட்கள்
உக்கடம், புல்லுக்காடு பகுதியில் பெரியகடை வீதி போலீசார் ரோந்து சென்றனர். புல்லுக்காடு இறக்கத்தில் சந்தேகத்துக்கு இடமாக நின்றிருந்த, தெற்கு உக்கடம், ஜி.எம்., நகரை சேர்ந்த முசா,44, நாகூர் மீரன்,30, மற்றும் கரும்புக்கடை, ராஜிவ் நகரை சேர்ந்த தஸ்தாஹீர்,44, ஆகியோரை சோதனையிட்டபோது, 14.100 கிலோ தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருப்பது தெரியவந்தது. மூவரையும் போலீசார் கைது செய்தனர்.