Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ கோவையில் 'மெட்ரோ' ரயில் ஆசிய வங்கி குழுவினர் ஆய்வு

கோவையில் 'மெட்ரோ' ரயில் ஆசிய வங்கி குழுவினர் ஆய்வு

கோவையில் 'மெட்ரோ' ரயில் ஆசிய வங்கி குழுவினர் ஆய்வு

கோவையில் 'மெட்ரோ' ரயில் ஆசிய வங்கி குழுவினர் ஆய்வு

ADDED : ஜூலை 05, 2024 02:40 AM


Google News
Latest Tamil News
கோவை;கோவையில், 'மெட்ரோ' ரயில் இயக்க பரிந்துரைக்கப்பட்ட வழித்தடத்தை, ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி குழு மற்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தினர், நேற்று ஆய்வு செய்தனர்.

கோவையில் 'மெட்ரோ' ரயில் இயக்க சாத்தியம் இருக்கிறதா என, சென்னை 'மெட்ரோ' ரயில் நிறுவனம் நான்கு வழித்தடங்களில் ஆராய்ந்தது. அதில், அவிநாசி ரோடு மற்றும் சத்தி ரோடு என, இரு வழித்தடங்களில் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகளை பட்டியலிட்டு, தமிழக அரசிடம் திட்ட அறிக்கை சமர்ப்பித்தது. உத்தேசமாக, 10 ஆயிரத்து, 740 கோடி ரூபாய் தேவைப்படும் என மதிப்பிட்டது.

உக்கடம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் சந்திப்பு நிலையம் அமையும். இங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன், கலெக்டர் அலுவலகம் வழியாக அவிநாசி ரோடு அண்ணாதுரை சிலை வரை இணைப்பு பாதை; அண்ணாதுரை சிலையில் இருந்து நீலாம்பூர் வரை மற்றும் பீளமேடு விமான நிலையத்துக்கு செல்ல இணைப்பு பாதை அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், ரயில்வே ஸ்டேஷனில் துவங்கி ராம் நகர், காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட், ஆம்னி பஸ் ஸ்டாண்ட், கணபதி, அத்திப்பாளையம் ஜங்சன், சரவணம்பட்டி, வலியம்பாளையம் பிரிவு வரை சத்தி ரோட்டில் மெட்ரோ ரயில் தடம் இறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

அவிநாசி ரோட்டில், 20.4 கி.மீ., துாரம், சத்தி ரோட்டில் வலியம்பாளையம் பிரிவு வரை 14.4 கி.மீ., துாரம் என, மொத்தம், 34.8 கி.மீ., துாரத்துக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான அனுமதி மற்றும் நிதியுதவி கேட்டு, மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் துறைக்கு, கடந்த மார்ச் மாதம், தமிழக அரசு திட்ட அறிக்கை அனுப்பியது. அச்சமயத்தில், லோக்சபா தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால், அத்திட்ட பணி நிறுத்தி வைக்கப்பட்டது. நன்னடத்தை விதிகள் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தற்போது வேகமெடுத்துள்ளன.

இத்திட்டத்தை செயல்படுத்த பெருந்தொகை தேவைப்படுவதால், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியிடம், தமிழக அரசு கடன் கோரியது. பல்வேறு பணிகளுக்கு நிதியுதவி அளித்து வரும் அவ்வங்கி, மதுரை மற்றும் கோவையில் செயல்படுத்தும் மெட்ரோ ரயில் திட்டத்துக்கும் நிதியுதவி அளிக்க முன்வந்துள்ளது.

இதைத்தொடர்ந்து, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன திட்ட இயக்குனர் அர்ச்சுனன் தலைமையில், ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் உயர் முதலீட்டு அலுவலர் வென்யூ கு, மெட்ரோ ரயில் நிறுவன தலைமை பொது மேலாளர் ரேகா (திட்டமிடல் மற்றும் வடிவமைப்பு) மற்றும் உயரதிகாரிகள், உக்கடம் பஸ் ஸ்டாண்ட் மற்றும் ரயில்வே ஸ்டேஷன் பகுதிகளில் நேற்று ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.

உக்கடத்துக்கும் ரயில்வே ஸ்டேஷனுக்கும் உள்ள துாரம், ரயில்வே ஸ்டேஷனில் உள்ள தண்டவாளத்தை பயன்படுத்த முடியுமா, ரயில்வே ஸ்டேஷனை கடக்கும்போது, இதர ரயில்களின் குறுக்கீடு தவிர்க்க என்ன வழி, கலெக்டர் அலுவலகம் வழியாக அவிநாசி ரோடு செல்வதற்கு வழித்தடம் உட்பட தொழில்நுட்ப ரீதியான சந்தேகங்களுக்கு மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இக்குழுவினர், இன்று (5ம் தேதி) சென்னையில் தமிழக அரசின் நிதித்துறை செயலரை சந்திக்கின்றனர்.

அப்போது, மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு செலவிடும் தொகை, இரு வழித்தடங்களில் உத்தேசமாக எத்தனை பயணிகள் பயணிக்க வாய்ப்பிருக்கிறது; அதன் மூலம் கிடைக்கும் வருவாய்; கொடுக்கும் கடன் தொகையை எத்தனை ஆண்டுகளுக்குள் திருப்பிக் கொடுக்கப்படும் என்பன போன்ற விபரங்கள் விவாதிக்கப்பட உள்ளன.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us