ADDED : ஜூலை 05, 2024 02:43 AM
கோவை:அரசு அலுவலரிடம் ரூ.4,250 பிக்பாக்கெட் அடிக்க முயன்றவர்களை பிடித்து போலீசாரிடம் பொது மக்கள் ஒப்படைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை சேர்ந்தவர் இளையராஜா,43. இவர் சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன அலுவலகத்தில் உதவியாளராக பணிபுரிகிறார்.
இவர் நேற்று முன்தினம் கோவை வந்தார். பின்னர் மதியம், 2:15 மணியளவில் காந்திபுரம் டவுன் பஸ் ஸ்டாண்ட் வந்து இறங்கினார். அப்போது, விவேகானந்தாபுரத்தை சேர்ந்த மணிகண்டன்,34, இளையராஜாவின் பாக்கெட்டில் இருந்த ரூ.4,250ஐ திருட முயன்றபோது கையும் களவுமாக பிடிபட்டார்.
இவருடன் இருந்த பீளமேடு, விநாயகர் கோவில் வீதியை சேர்ந்த பிரபாகரன்,34 என, இருவரையும் பிடித்து அங்கிருந்தவர்கள் காட்டூர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதையடுத்து, இருவர் மீதும் வழக்கு பதிந்து போலீசார் சிறையில் அடைத்தனர்.