Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/நகர்ப்புற மேம்பாட்டு வாரிய புது குடியிருப்புகள் தண்டையார்பேட்டையில் பிப்ரவரியில் திறப்பு

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய புது குடியிருப்புகள் தண்டையார்பேட்டையில் பிப்ரவரியில் திறப்பு

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய புது குடியிருப்புகள் தண்டையார்பேட்டையில் பிப்ரவரியில் திறப்பு

நகர்ப்புற மேம்பாட்டு வாரிய புது குடியிருப்புகள் தண்டையார்பேட்டையில் பிப்ரவரியில் திறப்பு

ADDED : ஜன 06, 2024 12:16 AM


Google News
Latest Tamil News
தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையில், 54 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள, 14 மாடி நகர்புற வாழ்விட புது குடியிருப்புகள், பிப்ரவரியில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

தண்டையார்பேட்டை, கைலாசபுரத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக 300க்கும் மேற்பட்டோர் குடிசை வீடுகளில் வசித்து வந்தனர்.

இப்பகுதி, அடிப்படை கட்டமைப்பு வசதியின்றி, மழைக்காலங்களில் பாதுகாப்பற்ற நிலையும், சுகாதார சீர்கேடும் நிலவியது.

எனவே, பாதுகாப்பற்ற குடியிருப்புகளை இடித்து, தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படாத வகையில், அதே பகுதியில் புது குடியிருப்புகள் கட்டித்தர வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து, புது குடியிருப்பு கட்ட தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் முடிவெடுத்துள்ளது.

இதற்காக, 2019ல் குடியிருப்புகள் இடிக்கப்பட்டன. கடந்த 2019ல் புதிதாக, 54.13 கோடி செலவில், தரைதளத்தில் பார்க்கிங் வசதியுடன், 14 மாடிகளில் 392 குடியிருப்புகள் கட்ட முடிவு செய்யப்பட்டு பணிகள் நடந்தன.

இதில் ஐந்து லிப்ட்கள், தெருவிளக்குகள், மழைநீர் சேகரிப்பு திட்டம், தார்ச்சாலை, தீயணைப்பான் வசதியும் செய்யப்பட்டுள்ளது.

இக்கட்டடம் முழுதும் செங்கல் இல்லாமல், கான்கிரீட்டால் கட்டப்பட்டது. ஒவ்வொரு வீடும் 400 சதுரடியில் அமைந்துள்ளது.

தற்போது, 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. அடுத்த மாதம் மக்கள் பயன்பாட்டிற்கு வருகிறது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:கடந்த 2019ல் பணிகள் துவங்கிய நிலையில், கொரோனா நோய் தொற்று பரவல், தொடர் மழை, இயற்கை சீற்றங்கள், அரசால் தாமதமாக வழங்கப்பட்ட கட்டுமான நிதி தொகை உள்ளிட்ட காரணங்களால், கட்டுமான பணிகள் ஆமை வேகத்தில் நடந்தன. தற்போது 95 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன.தற்போது தார்ச்சாலை பணி, வண்ணம் பூசும் பணி நடக்கிறது. பிப்ரவரி மாதத்திற்குள் பணிகள் முடிவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us