ADDED : ஜன 28, 2024 12:09 AM
திருவான்மியூர், தரமணி, மத்திய கைலாஷ், துரைப்பாக்கம் பகுதிகளை இணைக்கும் சந்திப்பாக, டைடல் பார்க் உள்ளது.
இங்கு, மேம்பால ரயில் நிலையம், ஐ.டி., நிறுவனங்கள் உள்ளதால், போக்குவரத்து நெரிசல் அதிகமாக இருக்கும்.
நெரிசலை குறைக்க, திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் மற்றும் சி.எஸ்.ஐ.ஆர்., சாலை நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில், 'யு' வடிவ மேம்பாலம் கட்டும் பணி 2021ல் துவங்கியது.
இதில், 18 துாண்கள் அமைக்கப்படுகின்றன. மைய துாண், 18 அடி உயரம். மேம்பால சாலை, 400 மீட்டர் நீளம், 25 அடி அகலம் உடையது. தற்போது, 70 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளன. எஞ்சிய பணிகள் இரண்டு மாதங்களில் முடிக்கப்பட்டு, திருவான்மியூரில் இருந்து மத்திய கைலாஷ் நோக்கி வாகனங்கள் செல்லும் வகையில் பாலம் திறக்கப்பட உள்ளது.
திருவான்மியூரில் இருந்து சி.எஸ்.ஐ.ஆர்., சாலை நோக்கி செல்லும் பாலப்பணிகள், போலீஸ் அனுமதிக்காக காத்திருக்கிறது. அனுமதி கிடைத்தால், மூன்று மாதங்களில் முடிக்க, சாலை மேம்பாட்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.