/உள்ளூர் செய்திகள்/சென்னை/70 ஆண்டு பழமையான மைதானம் பறிமுதல் வாகனங்களால் ஆக்கிரமிப்பு70 ஆண்டு பழமையான மைதானம் பறிமுதல் வாகனங்களால் ஆக்கிரமிப்பு
70 ஆண்டு பழமையான மைதானம் பறிமுதல் வாகனங்களால் ஆக்கிரமிப்பு
70 ஆண்டு பழமையான மைதானம் பறிமுதல் வாகனங்களால் ஆக்கிரமிப்பு
70 ஆண்டு பழமையான மைதானம் பறிமுதல் வாகனங்களால் ஆக்கிரமிப்பு
ADDED : ஜன 29, 2024 01:33 AM

பூந்தமல்லி:பூந்தமல்லி நகராட்சிக்கு உட்பட்ட மேல்மா நகரிலுள்ள அரசு நிலத்தில், கடந்த 1953 முதல் 'கென்னடி கிளப்' எனும் பெயரில் கால்பந்தாட்ட மைதானம் செயல்பட்டு வந்தது.
ஆறு ஏக்கர் பரப்பளவு கொண்ட இந்த மைதானத்தில், அப்பகுதியைச் சேர்ந்த மக்கள் கால்பந்து, கபடி, உடற்பயிற்சி, வலு துாக்குதல் உள்ளிட்ட பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
காலப்போக்கில், கடந்த 1970ல் அம்பேத்கர் கால்பந்தாட்ட மைதானமாக மாறியது. இந்த மைதானத்தைச் சுற்றி பூந்தமல்லி போலீஸ் நிலையம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம், தாசில்தார் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் வந்த பின், இந்த மைதானம் 1.5 ஏக்கராக சுருங்கியது.
இதைத்தொடர்ந்து மைதானத்தில், அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளிகளின் கலை நிகழ்ச்சிகள், மாவட்ட அளவில் பல்வேறு விளையாட்டு போட்டிகளும் நடந்தன.
அதேபோல், இந்த மைதானம் காலியாக காட்சி அளித்ததால், இங்கு கட்டடங்களை கட்ட அரசு முயற்சி மேற்கொண்டது. அப்பகுதிவாசிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் முயற்சியால், அந்த முயற்சி தடுக்கப்பட்டு மைதானம் மீட்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 1985 முதல் பூந்தமல்லி போலீஸ் மற்றும் ஆர்.டி.ஓ.,வால், விபத்து மற்றும் மீட்பு வாகனங்கள் அந்த மைதானத்தில் நிறுத்தப்பட்டன.
கொரோனாவுக்குப் பின் வாகனங்கள் நிறுத்துவது அதிகரித்ததால், 25 சதவீத மைதானம் காணாமல் போனது. அதேபோல், மீட்பு வாகனங்கள் இங்கு பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் அதிக அளவில் உலா வருகின்றன.
அந்த வாகனத்தின் ஓரத்தில் அங்கன்வாடி மையம் செயல்படுவதால், பள்ளிக்குள் அவை புகுந்துவிடும் என, பொதுமக்கள் அச்சப்படுகின்றனர்.
தொடர்ந்து, மீட்பு வாகனங்களால் மைதானம் பல்லாங்குழி போல் காட்சி அளிக்கிறது. இதனால், இளம் விளையாட்டு வீரர்கள் மைதானத்தை பயன்படுத்துவது குறைந்து வருகிறது.
இரவு நேரங்களில் மைதானம் கும்மிருட்டாக காட்சி அளிப்பதால், சிலர் மது அருந்தும் கூடாரமாக பயன்படுத்தும் சூழல் உள்ளது.
விளையாட்டு வீரர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் இதுகுறித்து, அரசு அதிகாரிகள் உட்பட பலரிடம் புகார் அளித்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அங்கு உள்ள வாகனங்களை அகற்றி, மீதமுள்ள விளையாட்டு மைதானத்தை மக்கள் முழுமையாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
வழக்கறிஞர் அன்பரசன் என்பவர் கூறியதாவது:
விளையாட்டு மைதானத்தை பலர், காலி நிலமாக பார்க்கின்றனர். ஆனால், அந்த மைதானத்தில் விளையாடிய பலரின் வாழ்க்கை உயர்ந்துள்ளது. இன்றைய இளம் தலைமுறையினர் மைதானத்தில் விளையாடுவதால், தீய பழக்கங்கள் மனதை ஆட்கொள்ளாமல், மனதை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மைதானத்தில் வாகனங்களை நிறுத்துவது குறித்து, ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கரிடம் கேட்ட போது,''விரைவில் அங்குள்ள வாகனங்கள் முழுமையாக வேறு இடங்களுக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.