Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கால்வாய்களை ஆழப்படுத்தும் பணி துவக்கம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கால்வாய்களை ஆழப்படுத்தும் பணி துவக்கம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கால்வாய்களை ஆழப்படுத்தும் பணி துவக்கம்

பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை கால்வாய்களை ஆழப்படுத்தும் பணி துவக்கம்

ADDED : செப் 08, 2025 06:20 AM


Google News
கொடுங்கையூர்: பருவ மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் மற்றும் வியாசர்பாடி கால்வாய்கள், 10.50 கோடி ரூபாய் செலவில், 3 அடி ஆழத்திற்கு துார்வாரி ஆழப்படுத்தும் பணிகள் துவங்கியுள்ளன.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் ஆர்.கே.நகர், பெரம்பூர், ராயபுரம் ஆகிய தொகுதிகள் உள்ளன. இங்கு கேப்டன் காட்டன், வியாசர்பாடி கால்வாய், கொடுங்கையூர் கால்வாய் மற்றும் 13 சிறிய கால்வாய்கள் உள்ளன.

தண்டையார்பேட்டை மண்டலத்தில் 3,000 கி.மீ., நீளத்திற்கு மழைநீர் வடிகால் உள்ளது. அனைத்து நீர்வழித்தடங்களும் பகிங்ஹாம் கால்வாயில் இணைகிறது. அங்கிருந்து எண்ணுார் முகத்துவாரம் வழியாக கடலில் கலக்கிறது.

மாநகராட்சி கட்டுப்பாட்டில் உள்ள வியாசர்பாடி, கேப்டன் காட்டன், கொடுங்கையூர் கால்வாய்களில், 4 அடி உயரத்திற்கு மண் கழிவுகள் தேங்கியுள்ளன.

ஒவ்வொரு ஆண்டு மழைக்காலங்களின் போது, தேங்கியுள்ள மண் கழிவுகளால் நீரோட்டம் தடைப்பட்டு, கால்வாயையொட்டி உள்ள வீடுகளில் வெள்ள பாதிப்பு ஏற்படுகிறது.

இதனால் கேப்டன் காட்டன், வியாசர்பாடி, கொடுங்கையூர் கால்வாய்களை ஒட்டி உள்ள பகுதிகளில் வசிக்கும் லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்குள்ளாகின்றனர்.

இந்நிலையில், மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, 10.50 கோடி ரூபாய் செலவில், கேப்டன் காட்டன் கால்வாய், கொடுங்கையூர் மற்றும் வியாசர்பாடி கால்வாய் 1 மீட்டர் ஆழப்படுத்தும் பணிகளும், 3 அடிக்கு துார்வாரும் பணிகளும் நடக்கின்றன. இதற்கான பணிகளை துணை முதல்வர் உதயநிதி, ஆக., 30ம் தேதி துவக்கி வைத்தார்.

முதற்கட்டமாக, கால்வாய்களில் மிதவை இயந்திரம் மூலம் ஆகாயத்தாமரை அகற்றும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன. மழைக்காலம் துவங்குவதற்கு முன், கால்வாயை துார்வாரி ஆழப்படுத்தும் பணிகள் முடிக்கப்படும் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us