Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/சிதம்பர பெருமானை போற்றும் வகையில் அழகாய் அமைந்திருந்த மெய்யம்மை நாட்டியம்

சிதம்பர பெருமானை போற்றும் வகையில் அழகாய் அமைந்திருந்த மெய்யம்மை நாட்டியம்

சிதம்பர பெருமானை போற்றும் வகையில் அழகாய் அமைந்திருந்த மெய்யம்மை நாட்டியம்

சிதம்பர பெருமானை போற்றும் வகையில் அழகாய் அமைந்திருந்த மெய்யம்மை நாட்டியம்

ADDED : ஜன 11, 2024 01:23 AM


Google News
சங்கர நாட்டியாலயா மாணவி மெய்யம்மையின் நாட்டிய நிகழ்ச்சி வாணி மஹாலில் நடந்தது. 'பரமானந்த நர்த்தன கணபதியை போற்றிட' என, கம்பீரநாட்டை ராகத்தில் துவங்கியது.

'மூலாதாரனே, கஜமுகனே, ஈசன் மகனே, ஏக தந்தனே உன்னை பணிகிறேன்' என போற்றிட, கமாஸ் ராகத்தில் வேலனை காண அழைத்துச் சென்றனர்.

வர்ணத்தின் திரிகால ஜதிக்குப் பின், வள்ளி கல்யாண கதையை சஞ்சாரித்து, கணபதி உதவியோடு வள்ளியின் கரம் பற்றிய முருகன், கோலமயில் மீதேறி பவனி வரும் காட்சியும், இடம் பெற்றிருந்தது.

இதில், கும்தரி சமகாலஜதி அனைவரையும் கவர்ந்தது. ஆறுமுகனை சீராட்டி வளர்த்து, அசுரர்களை வதம் செய்ய, அன்னை சக்தியிடம் வேல் வாங்கி போரிட்டு வெல்லும் தேவசேனாதிபதி கோலம், மிக அழகாக இருந்தது. போர் காட்சிக்கு ஏற்ப, பரத்வாஜின் மிருதங்க வாசிப்பு அதகளம் செய்தது.

நாரத முனி ஞானப்பழம் கொடுக்க, அதைப் பெற கணபதியும், வேலனும் போட்டியில் ஈடுபட, தனக்கில்லையா என சினம் கொண்ட வேலனை, முத்தாயிஸ்வர சாஹித்யங்கள் அடுக்கடுக்காய் விவரிக்க 'அவ்வைக்கு அருள் செய்தவனே, உனை நாடி காவடி ஏந்தி வரும் அடியவர்க்கு அருள் செய்பவனே, பிரவநாதனே, உன்னை காண கண் தேடுதே' என்ற சரணங்களோடு அற்புதமாய் முடிந்தது.

கேதார கவுளை ராகத்தை சுகன்யா வில்லிசையில் வழங்க, 'தத்தோம் கிடதக தரிகிடத்தோம்' ஜதியோடு, நடராஜர் நடனமிட்டு வர ஆரம்பித்தது கீர்த்தனம்.

காளியும் நடராஜனும் ஆடியதும், அவரின் செம்பொற் சலங்கையின் நாதத்தையும், தேவதேவியர் வாத்தியங்களை இசைத்த விதம், சிதம்பர பெருமானை போற்றும் வகையில் அழகாக அமைந்திருந்தது.

பின், வெண்ணெய் திருடிய கண்ணனை, கையும் களவுமாய் பிடித்து, அவரது தாயான யசோதாவிடம் ஒப்படைக்க, குழந்தையின் லீலைகளை வஞ்சகப் புகழ்ச்சியோடு அழகுற ஒப்பிட்டு, மெய்யம்மை நடனமாடினார்.

ஸ்ரீ கோகுல கிருஷ்ணருடைய குழலோடு, செஞ்சுட்டி தில்லானா திதிதை அடவுகள் அரங்கில் அமைய, 'காளிங்க நர்த்தன கண்ணா, முரளி மதுரமோகன' என போற்றி, பலவகை பக்க அடவுகளோடு அனுபல்லவி கோர்வைகள் அமைத்திருந்தார்.

தொடர்ந்து, கண்ணனின் அழகை வர்ணித்த ஆடல் அமைப்பு, நட்டுவாங்கம், குரலிசை ஆகியவற்றை, கனகா கிருஷ்ண பிரசாத் அற்புதமாக செய்ய, தன் நாட்டிய நிகழ்ச்சியை அழகுற நிறைவு செய்தார் மெய்யம்மை.

- மா.அன்புக்கரசி,

மாணவி, தமிழ்நாடு கவின் கலை மற்றும் இசை பல்கலை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us