/உள்ளூர் செய்திகள்/சென்னை/மகன், மனைவியை கொலை ஆந்திரா நபருக்கு 'ஆயுள்'மகன், மனைவியை கொலை ஆந்திரா நபருக்கு 'ஆயுள்'
மகன், மனைவியை கொலை ஆந்திரா நபருக்கு 'ஆயுள்'
மகன், மனைவியை கொலை ஆந்திரா நபருக்கு 'ஆயுள்'
மகன், மனைவியை கொலை ஆந்திரா நபருக்கு 'ஆயுள்'
ADDED : ஜன 31, 2024 12:14 AM
சென்னை, சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் குணசுந்தரி. இவரது மகன் மகேஷ்குமார், 7. குணசுந்தரியின் கணவர் உயிரிழந்து விட்டார்.
இந்நிலையில், அவருக்கும், ஆந்திர மாநிலம் நெல்லுார் மாவட்டத்தைச் சேர்ந்த மேஸ்திரி 'டேஞ்சர்' என்ற டேவிட், 46, என்பவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
இதையடுத்து, டேவிட்டை திருமணம் செய்த குணசுந்தரி, ஆந்திராவில் வசித்து வந்தார். பின், குணசுந்தரி தன் மகனுடன் வண்ணாரப்பேட்டையில் உள்ள தாயின் வீட்டுக்கு வந்துள்ளார்.
அவ்வப்போது, வண்ணாரப்பேட்டை வந்த டேவிட், குணசுந்தரியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவருடன் தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இதையடுத்து, 2014 நவ., 14ல் தகராறில் ஈடுபட்ட டேவிட், குணசுந்தரி, அவரது மகன் ஆகியோரை கத்தியால் குத்தி கொலை செய்தார். இதில், குணசுந்தரியின் தாய் நாகவள்ளிக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக புது வண்ணாரப்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, தலைமறைவாக இருந்த டேவிட்டை, 2022ல் கைது செய்தனர்.
வழக்கு விசாரணை, அல்லிகுளத்தில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில், நீதிபதி டி.ஹெச்.முகமது பாரூக் முன் நடந்தது.
வழக்கை விசாரித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவு:
டேவிட் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பில் நிரூபிக்கப்பட்டு உள்ளது.
எனவே, மனைவியை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், மகனை கொலை செய்த குற்றத்துக்கு ஆயுள் தண்டனையும், கொலை முயற்சிக்கு 10 ஆண்டுகளும், அத்துமீறி நுழைந்த குற்றத்துக்கு ஏழு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், அபராதமாக 20,000 ரூபாயும் விதிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.