/உள்ளூர் செய்திகள்/சென்னை/ புழுவுடன் உணவு வினியோகம் விடுதி மாணவர்கள் அலறல் புழுவுடன் உணவு வினியோகம் விடுதி மாணவர்கள் அலறல்
புழுவுடன் உணவு வினியோகம் விடுதி மாணவர்கள் அலறல்
புழுவுடன் உணவு வினியோகம் விடுதி மாணவர்கள் அலறல்
புழுவுடன் உணவு வினியோகம் விடுதி மாணவர்கள் அலறல்
ADDED : செப் 25, 2025 03:03 AM
சென்னை ஆதிதிராவிடர் சமூக நல விடுதிகளில், பொது சமையலறை திட்டத்தின் கீழ், ஒப்பந்ததாரர் வாயிலாக வினியோகம் செய்யப்படும் உணவு தரமற்றதாக இருப்பதாகவும், புழு, பூச்சியும் கிடப்பதாகவும் மாணவர்கள் குற்றஞ் சாட்டுகின்றனர்.
தமிழகம் முழுதும், ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் செயல்படும், 1,331 சமூக நல விடுதிகளில், 70,000 க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் தங்கி படித்து வருகின்றனர்.
சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில், உள்ள விடுதி மாணவர்களுக்கு, அந்தந்த விடுதியில் உணவு தயாரித்து வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், சென்னையில் உள்ள 21 விடுதிகளில் படிக்கும், 2,000 மாணவர்களுக்கு, ஓராண்டாக, பொது சமையலறை திட்டத்தின் கீழ், சைதாப்பேட்டை மற்றும் வேப்பேரியில், உணவு தயாரித்து, 'பார்சல்' முறையில் வழங்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு தயாரித்து வினியோகம் செய்யப்படும் உணவு வகைகள் தரமற்று இருப்பதால், சாப்பிட முடியாமல் அருகில் உள்ள கால்நடைப் பண்ணைக்கு ஊழியர்களே விற்கும் அவலம் நடக்கிறது.
இந்நிலையில், பொது சமையலறை திட்டத்தின் கீழ், ஒப்பந்த நிறுவனத்தினர் தரமற்ற பொருட்களை பயன்படுத்தி, உணவு தயாரிப்பதாகவும், உணவில் புழு, பூச்சி கிடப்பதாகவும், சைதாப்பேட்டையில் உள்ள எம்.சி., ராஜா சமூக நல விடுதி மாணவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இதுகுறித்து, எம்.சி., ராஜா விடுதி மாணவர்கள் சிலர் கூறியதாவது:
கல்லுாரி திறந்த பின் வழங்கப்படும் உணவு தரமற்றதாக உள்ளது. கடந்த சனிக்கிழமை காலை உண வாக வழங்கப்பட்ட இட்லியில் புழு கிடந்தது. சமையலரிடம் கேட்டாலும், அவர் கண்டுகொள்ளவில்லை.
இதனால் கடைக்கு சென்று சாப்பிட்டோம். அரசு தரப்பில், உணவுப் படியாக ஒரு மாணவருக்கு, 1,500 ரூபாய் வழங்கப்படுகிறது. அதேபோல், அரிசி, கோதுமை உள்ளிட்ட பொருட்கள் முறையாக கிடைத்தும், ஒப்பந்த ஊழியர்கள் தரமற்ற முறையில், சமைப்பது வேதனையாக உள்ளது.
குடும்ப சூழ்நிலை காரணமாக, இங்கு தங்கி படிக்கிறோம். எங்களுக்கு, தரமற்ற உணவு பரிமாறப்படுவதும், உணவில், 'புழு, பூச்சி' கிடப்பதும் வழக்கமாகிவிட்டது.
இதனால், அதை சாப்பிடாமல் அருகில் உள்ள கடையில் சென்று சாப்பிட்டோம். இதுகுறித்து கேள்வி எழுப்பினால், விடுதி நிர்வாகத்தினர் மிரட்டுகின்றனர்.
அதிகாரிகள் ஆய்வுக்கு வரும் நாட்களில் மட்டும் எங்களுக்கு நல்ல உணவு கிடைக்கிறது. மற்ற நாட்களில் தரமற்ற உணவு தான் கிடைக்கிறது. எனவே, அதிகாரிகள் இப்பிரச்னைக்கு உரிய தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு, மாணவர்கள் கூறினர்.
நோட்டீஸ் அளித்துள்ளோம் உணவு தரமற்று உள்ளதாகவும், பூச்சி, புழு இருப்பதாகவும் வந்த புகாரை அடுத்து, ஒப்பந்த நிறுவனத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் தரப்பட்டுள்ளது. காய்கறியை மொத்தமாக வாங்கி தேக்கி வைக்ககூடாது; இரண்டு நாட்களுக்கு ஒரு முறை வாங்க வேண்டும். உணவு தயாரிப்பு கூடத்தை, வாரம் ஒரு முறை துாய்மைப்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதிகாரிகள் திடீர் ஆய்வும் நடத்தி வருகின்றனர். மீண்டும் இதுபோன்ற புகார்கள் வந்தால், ஒப்பந்த நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். - சென்னை மாவட்ட அதிகாரி, ஆதிதிராவிடர் நலத்துறை.