Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ வீடுகள் சந்தில் சிக்கிய மூதாட்டி 3 மணி நேரம் போராடி மீட்பு

வீடுகள் சந்தில் சிக்கிய மூதாட்டி 3 மணி நேரம் போராடி மீட்பு

வீடுகள் சந்தில் சிக்கிய மூதாட்டி 3 மணி நேரம் போராடி மீட்பு

வீடுகள் சந்தில் சிக்கிய மூதாட்டி 3 மணி நேரம் போராடி மீட்பு

UPDATED : மே 19, 2025 06:31 AMADDED : மே 19, 2025 01:30 AM


Google News
Latest Tamil News
மணலி:மணலி, காமராஜர் தெருவைச் சேர்ந்தவர் பொம்மி, 60; திருமணமாகவில்லை. உறவினருடன் வசித்து வருகிறார்.

நேற்று காலை, வீட்டில் இருந்தவர்கள் திருப்பதிக்கு சென்றுவிட்டனர். மூதாட்டி மட்டும் தனியாக இருந்துள்ளார்.

இந்நிலையில், மாடியில் காய வைக்கப்பட்டிருந்த வீடு துடைக்கும் மாம்ப், இரு வீட்டிற்கும் இடையேயான, அரை அடி அகல சந்தில் விழுந்துவிட்டது.

அதை எடுப்பதற்காக, அந்த சந்துக்குள் நடந்து சென்ற பொம்மி, குனிந்து மாம்ப் எடுக்கும்போது கால் இடறி வலதுபக்கம் சாய்ந்ததில், இரு வீட்டிற்கும் இடையே சிக்கிக்கொண்டார். அவரால் ஒரு அங்குலம் கூட அசைக்க முடியவில்லை.

இதனால் பீதியடைந்த அவரது சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் கூடினர். கயிற்றால் அவரை மீட்க முயன்றனர். முடியாததால், தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, அங்கு வந்த மணலி தீயணைப்பு வீரர்கள் மற்றும் போலீசார், மூதாட்டியை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.

சிறிய சந்து என்பதால், மெலிந்த சரீரம் உடைய தீயணைப்பு வீரர் முகமது யாசிப் என்பவரை, அத்துறையினர் அனுப்பினர்.

அவர், சந்தினுள் பொறுமையாக நடந்து சென்று மூதாட்டி பொம்மியை நெருங்கினார். மூதாட்டியின் வலது கையை பிடித்து துாக்கினார்.

அதே சமயம், பக்கத்து வீட்டு மாடியில் இருந்து நீல வண்ண கயிற்றை, மூதாட்டியின் இடது கையில் தீயணைப்பு துறையினர் மாட்டினர்.

மூதாட்டியின் பயத்தை போக்கி, இரு கைகளையும் மெல்ல இழுத்தபடியே, கொஞ்சம் கொஞ்சமாக மீட்டனர். மூன்று மணி நேர போராட்டத்திற்கு பின், பொம்மி பத்திரமாக மீட்கப்பட்டார். மூதாட்டிக்கு எந்த காயமுமின்ற மீட்ட தீயணைப்பு துறையினரை, அப்பகுதியினர் பாராட்டினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us