Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்த பெண் ஐ.டி., ஊழியர் தற்கொலை?

'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்த பெண் ஐ.டி., ஊழியர் தற்கொலை?

'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்த பெண் ஐ.டி., ஊழியர் தற்கொலை?

'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்த பெண் ஐ.டி., ஊழியர் தற்கொலை?

ADDED : ஜூன் 07, 2025 12:16 AM


Google News
Latest Tamil News
கொடுங்கையூர், திருச்சியைச் சேர்ந்த பாஸ்கர் மகள் நித்யா, 26; அம்பத்துாரில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் ஐந்து ஆண்டுகளாக பணிபுரிந்தார். கொடுங்கையூர், டீச்சர்ஸ் காலனியில் இரு மாதங்களாக தங்கியிருந்தார்.

இவரும், கொடுங்கையூர், வெங்கடேஸ்வர காலனியைச் சேர்ந்த பாலமுருகன், 28, என்பவரும், எட்டு மாதங்களாக காதலித்து வந்துள்ளனர்.

பாலமுருகன், ஹோட்டல் மேனேஜ்மென்ட் முடித்து, வேலையின்றி இருந்துள்ளார். தனியாக வசித்து வந்த நித்யா, பாலமுருகனை தன் வீட்டில் தங்கவைத்து, 'லிவிங் டுகெதர்' முறையில் இருந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று முன்தினம், தன்னை பார்க்க பெற்றோர் வருவதாக கூறி, பாலமுருகனை வெளியிடத்தில் தங்க சொல்லியுள்ளார்.

அன்றிரவு, தன் வீட்டில் தங்கிய பாலமுருகன், நேற்று காலை நித்யா வீட்டிற்கு சென்றார். கதவு திறந்து கிடந்தது. உள்ளே படுக்கை அறையில், மயங்கிய நிலையில் நித்யா கிடந்துள்ளார். படுக்கை அறையில் துாக்க மாத்திரைகள் கிடந்தன.

இதுகுறித்து பாலமுருகன் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு கொடுத்த தகவலின்படி, கொடுங்கையூர் போலீசார் சென்றனர். போலீசார் பரிசோதித்தபோது, நித்யா ஏற்கனவே இறந்தது தெரிந்தது. உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பினர்.

பாலமுருகனிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், பிப்., 26ம் தேதி, அம்பத்துாரில் நித்யா தங்கியிருக்கும்போது, வீட்டில் தாலி கட்டி ஒன்றாக வசித்ததாகவும், வேலைக்கு செல்லும்போது தாலியை கழற்றி வைத்துவிட்டு பணிக்கு சென்றதாகவும், வீட்டின் லாக்கரில் இருந்த 25 சவரன் தங்க நகைகள் காணவில்லை எனவும், பாலமுருகன் தெரிவித்துள்ளார்.

கொடுங்கையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கை முடிவில், நித்யா மரணம் கொலையா, தற்கொலையா என தெரியவரும் என, போலீசார் தெரிவித்தனர்.

துணை நடிகையுடன் வாழ்ந்த

'சொமேட்டோ' ஊழியர் தற்கொலை

ஆவடி, கோவில்பதாகை, கிருபா நகரைச் சேர்ந்தவர் சந்துரு, 21; 'சொமேட்டோ' உணவு டெலிவரி நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இவருக்கும், 25 வயது துணை நடிகைக்கும் பழக்கம் ஏற்பட்டு, ஐந்து மாதங்களாக, இருவரும் 'லிவிங் டுகெதர்' முறையில் வாழ்ந்து வந்தனர்.

ஷூட்டிங்கிற்கு செல்லாமல் வீட்டில் இருக்கும்படி, இளம்பெண்ணை நேற்று முன்தினம் காலை சந்துரு வற்புறுத்தியதாக தெரிகிறது. அதை பொருட்படுத்தாத அவர், ஷூட்டிங் சென்றதால் மனமுடைந்த சந்துரு, வீட்டின் படுக்கை அறையில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆவடி டேங்க் பேக்டரி போலீசார், சந்துருவின் உடலை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி விசாரிக்கின்றனர்.

திருமணமான ஒன்பது நாளில்

பட்டதாரி பெண் தற்கொலை

செஞ்சியை சேர்ந்தவர் ஜெகன்நாதன், 30; பி.எஸ்சி., பட்டதாரியான இவர், சென்னை ஆதம்பாக்கத்தில் தங்கி, 'பிலிப்கார்ட்' நிறுவன டெலிவரி ஊழியராக உள்ளார்.

இவருக்கும், வந்தவாசியைச் சேர்ந்த ஷாலினி, 26, என்பவருக்கும், கடந்த மாதம் 28ம் தேதி, நங்கநல்லுாரில் திருமணம் நடந்தது.

நேற்று காலை ஷாலினிக்கு தலைவலி ஏற்பட்டுள்ளது. அதற்கு மாத்திரை கொடுத்துவிட்டு, அருகே வசிக்கும் தன் அக்கா வீட்டிற்கு ஜெகன்நாதன் சென்றுவிட்டார்.

மீண்டும் வீடு திரும்பிய ஜெகன்நாதன், கதவை தட்டியும் ஷாலினி திறக்காததால், ஜன்னலை திறந்து பார்த்துள்ளார். அப்போது, ஷாலினி துாக்கில் தொங்கியது தெரிந்தது.

ஆதம்பாக்கம் போலீசார், ஷாலினியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பினர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஷாலினி இறந்துவிட்டதை உறுதி செய்தனர். திருமணமான ஒன்பதே நாளில், புதுப்பெண் ஷாலினி தற்கொலைக்கான காரணம் குறித்து, ஆதம்பாக்கம் போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us