ADDED : பிப் 06, 2024 12:35 AM
கொளத்துார், ஆவின் பால் வாங்கும் மாத அட்டைதாரர்கள், மாதாந்திர தவணை செலுத்தி, 'அப்டேட்' செய்ய முடியாததால், கார்டுகள் காலாவதியாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து, கொளத்துாரைச் சேர்ந்த மூத்த குடிமகனான வேணுகோபால் என்பவர் கூறியதாவது:
'சர்வர்' பிரச்னையால், ஆவின் மாதாந்திர அட்டைகளை பணம் செலுத்தி 'அப்டேட்' செய்ய முடிவதில்லை. அயனாவரத்தில் உள்ள ஆவின் அலுவலகத்திற்கு நேரில் சென்று கேட்டாலும், முறையான பதில் அளிப்பதில்லை. தனியார் இன்டர்நெட் சேவை மையத்திற்குச் சென்று பணம் செலுத்த அறிவுறுத்துகின்றனர். ஆனால், 'சர்வர்' வேலை செய்வதே இல்லை.
கார்டுதாரர்களுக்கு பால் விலை ஒன்றிரண்டு ரூபாய் குறைவாக கிடைப்பதால், அட்டைதாரர்களை முடக்குவதற்காகவே ஆவின் இப்படி ஒரு தந்திரத்தை கையாள்கிறதோ என்ற சந்தேகம் எழுகிறது.
அதனால், அட்டை புதுப்பித்தலை ஆவின் கடைகளிலேயே செய்து முடிக்கும் வகையில், ஏற்பாடுகள் செய்து தர வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.