Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ போதையில் இளைஞர்களை தாக்கி சொகுசு காரில் பறந்த 7 பேர் சிக்கினர்

போதையில் இளைஞர்களை தாக்கி சொகுசு காரில் பறந்த 7 பேர் சிக்கினர்

போதையில் இளைஞர்களை தாக்கி சொகுசு காரில் பறந்த 7 பேர் சிக்கினர்

போதையில் இளைஞர்களை தாக்கி சொகுசு காரில் பறந்த 7 பேர் சிக்கினர்

ADDED : மார் 25, 2025 12:07 AM


Google News
கோயம்பேடு, அரும்பாக்கம், எம்.எம்.டி.ஏ., காலனியைச் சேர்ந்தவர் மணிமாறன், 34. இவர், பெருமாள் கோவில் தெருவைச் சேர்ந்த நண்பர் ஜோசப் எடிசன், 29, என்பவருடன், நேற்று முன்தினம் இரவு அரும்பாக்கம், ஜெய் நகரில் உள்ள ஹோட்டலில் சாப்பிட பைக்கில் சென்றனர்.

அப்போது, அங்கு சொகுசு காரில் வந்தவர்களுடன் தகராறு ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில், இருவரையும் சரமாரியாக தாக்கினர். மேலும், அந்த கும்பல் மணிமாறனின் பைக்கை துாக்கி, அவரது காலில் போட்டனர். அத்துடன், தலைகவசத்தால், ஜோசப் எடிசனையும் தாக்கி தப்பியது.

இதில், மணிமாறனின் வலது கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இருவரும், கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து கோயம்பேடு போலீசார் விசாரித்தனர்.

இதில், அந்த கார் பிரசாந்த் என்பவர் பெயரில் இருந்தது. அவரிடம் விசாரித்தபோது, மூன்று மாதங்களுக்கு முன் இ.சி.ஆரைச் சேர்ந்த அய்யப்பன் என்பவருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து, பிரசாந்திடம் இருந்து அய்யப்பனின் மொபைல் போன் எண்ணை போலீசார் பெற்றனர். பின், லொகேஷன் வைத்து விசாரித்ததில், கிண்டியில் உள்ள விடுதியை காட்டியது.

அங்கு சென்ற போலீசார், விடுதியில் தங்கியிருந்தவர்களை கைது செய்ததுடன், சொகுசு காரையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்டது, ஆதம்பாக்கத்தைச் சேர்ந்த டான்சர் அய்யப்பன், 31, கவுதம், 36, கிருஷ்ணமூர்த்தி, 44, அருண்குமார், 39, கிண்டியைச் சேர்ந்த வேலாயுதம், 37, வேளச்சேரியைச் சேர்ந்த குமார், 43, பல்லாவரத்தைச் சேர்ந்த சந்தோஷ், 23, ஆகிய ஏழு பேர் என தெரியவந்தது.

இதில், கவுதம் என்பவரின் பிறந்த நாளை கொண்டாடிவிட்டு, மது போதையில் வந்தவர்கள் ேஹாட்டலில் சாப்பிடும் போது தகராறு ஏற்பட்டுள்ளது தெரியவந்தது. போலீசார் விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us