Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ அரும்பாக்கத்தில் தேவையின்றி தடுப்பு வாகன ஓட்டிகள் தினமும் தத்தளிப்பு

அரும்பாக்கத்தில் தேவையின்றி தடுப்பு வாகன ஓட்டிகள் தினமும் தத்தளிப்பு

அரும்பாக்கத்தில் தேவையின்றி தடுப்பு வாகன ஓட்டிகள் தினமும் தத்தளிப்பு

அரும்பாக்கத்தில் தேவையின்றி தடுப்பு வாகன ஓட்டிகள் தினமும் தத்தளிப்பு

ADDED : ஜூலை 09, 2024 12:35 AM


Google News
Latest Tamil News
அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலையில், அரும்பாக்கம் பகுதியில் தேவையின்றி அமைக்கப்பட்ட இரு 'சென்டர் மீடியன்' தடுப்புகளால், வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

அரும்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட பாஞ்சாலியம்மான் கோவில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் வசிப்போர், பூந்தமல்லி நெடுஞ்சாலையைக் கடந்து கோயம்பேடு, அண்ணா நகர், பிராட்வே உள்ளிட்ட இடங்களுக்குச் சென்று வருகின்றனர்.

அவ்வாறு கடக்கும் சாலையின் வழியை தடுத்து, போலீசார் 'சென்டர் மீடியன்' அமைத்தனர்.

இதனால், இப்பகுதியில் வசிக்கும் மக்கள் இருபுறங்களிலும் 'யு - டர்ன்' திரும்ப, 1 கி.மீ., சுற்றிச் செல்லும் நிலை இருந்தது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியிட்ட பின், தடுப்புகள் அகற்றப்பட்டன.

தற்போது, அதே பகுதியான திருவீதியம்மன் கோவில் மற்றும் நடுவாங்கரை மேம்பால பகுதியில், மக்களுக்கு இடையூறாக தடுப்பு அமைத்து, பாதை திருப்பி விடப்பட்டுள்ளது.

இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்படுகின்றனர்.

இதுகுறித்து, அப்பகுதியில் வசிப்போர் கூறியதாவது:

அரும்பாக்கம் பூந்தமல்லி நெடுஞ்சாலையில், திருவீதியம்மன் கோவில் மற்றும் நடுவாங்கரை பகுதியில், இருபுறங்களிலும் திரும்பும் வகையில் வழி இருந்தது. தற்போது, இங்கு பொதுமக்களுக்கு இடையூறாக, சாலையில் தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.

இதனால், நடுவாங்கரையில் இருந்து வரும் வாகனங்கள், அண்ணா நகர் ஆர்ச் வரை, 1.5 கி.மீ., சென்று 'யு-டர்ன்' செய்ய வேண்டிய நிலை உள்ளது.

தடுப்பு அமைத்துள்ள சாலையில், விதிமீறி சிலர் எதிர் திசையில் வந்து, அரும்பாக்கம் வழியில் செல்வதால், விபத்து ஏற்படுகிறது.

அதேபோல், அரும்பாக்கம் திருவீதியம்மன் கோவில் அருகில் இருந்த 'யு - டர்ன்' அடைக்கப்பட்டதால், கோயம்பேடு மேம்பாலம் வழியாக ரோகிணி திரையரங்கம் வரை, 2.5 கி.மீ., சென்று திரும்ப வேண்டி உள்ளது.

இதுகுறித்து, போக்குவரத்து போலீசாரிடம் கேட்டால், நெரிசலை குறைக்க நடவடிக்கை எடுத்திருப்பதாக கூறுகின்றனர். இதனால் இப்பகுதியில் வசிப்போர், காலை, மாலை நேரங்களில் பள்ளி மற்றும் வேலைக்குச் செல்வோர் கடும் அவதியடைகின்றனர்.

இதுதொடர்பாக, நேற்று முன்தினம் சென்னை போலீஸ் கமிஷனரிடம் மனு அளித்துள்ளோம்.

பொதுமக்களின் நலன் கருதி, இரு சந்திப்பிலும் பழையபடி தடுப்புகளை அகற்றி, சாலையை கடக்கும் வசதி செய்து தர வேண்டும்.

இவ்வாறு கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us