ADDED : ஜூன் 04, 2024 12:48 AM
வியாசர்பாடி, வியாசர்பாடியில், நண்பரை கத்தியால் தாக்கியவரை, போலீசார் கைது செய்தனர்.
வியாசர்பாடி, காந்திபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜசேகர், 40; பெயின்டிங் வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் இரவு, தன் நண்பரான, அதே பகுதியைச் சேர்ந்த விநாயகம், 25, என்பவருடன் சேர்ந்து மது அருந்தினார்.
அப்போது, இருவருக்கும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், விநாயகம் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து திருப்பிப் பிடித்து, ராஜசேகரை பலமாக தாக்கியுள்ளார்.
இதில், பலத்த காயமடைந்த ராஜசேகர், அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்து, வியாசர்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.
இந்நிலையில் நேற்று காலை, தாக்குதலில் தொடர்புடைய வியாசர்பாடி, காந்திபுரத்தைச் சேர்ந்த விநாயகம், 25, என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து, கத்தி பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில் இவர், பழைய குற்றவாளி என தெரிந்தது. விசாரணைக்குப் பின், விநாயகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.