Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ 'கோவிலை காணோம்' வழக்கில் முடிவு மீண்டும் கட்டப்படுமென துறை தகவல்

'கோவிலை காணோம்' வழக்கில் முடிவு மீண்டும் கட்டப்படுமென துறை தகவல்

'கோவிலை காணோம்' வழக்கில் முடிவு மீண்டும் கட்டப்படுமென துறை தகவல்

'கோவிலை காணோம்' வழக்கில் முடிவு மீண்டும் கட்டப்படுமென துறை தகவல்

ADDED : ஜூலை 11, 2024 12:19 AM


Google News
Latest Tamil News
சென்னை,சென்னை மேற்கு மாம்பலம் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர் தாக்கல் செய்த மனு:

என்.எஸ்.சி., போஸ் சாலையில், செல்வ சுந்தர விநாயகர் கோவில் இருந்தது. நுாற்றாண்டு பழமையான இந்த கோவில், தற்போது காணாமல் போய் உள்ளது.

மாறாக, அந்த கோவில் இருந்த இடம் தெரியாமல் இடித்துவிட்டு, அங்கு குப்பை தொட்டிகளை, மாநகராட்சி ஊழியர்கள் வைத்துள்ளனர்.

இக்கோவில், அரங்கநாத சுவாமி திருக்கோவில் நிர்வாக அதிகாரி கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால், அந்த தடயமே தெரியாமல் இடித்த மாநகராட்சி ஊழியர்களின் செயல் மிகவும் துரதிருஷ்டவசமானது.

எனவே, அந்த கோவிலை சுற்றியிருக்கும் குப்பை கழிவுகளை அகற்றிவிட்டு, சுற்றுச்சுவர் அமைத்து கோவிலை திரும்ப கட்டித் தர அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன், நீதிபதி முகமது சபீக் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.

மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் பி.டி.பெருமாள் ஆஜராகி, ''வருவாய் ஆவணங்கள்படி, கோவில் மற்றும் அதன் அருகே குளமும் இருந்துள்ளது.

''அந்த தடம் தெரியாமல் இடித்து, குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. எனவே, குப்பை கழிவுகளை அகற்றி, கோவில் எல்லைகளை அமைத்து, தினசரி பூஜைகள் செய்யும் வகையில் கோவிலை திரும்ப கட்டித்தர வேண்டும்,'' என்றார்.

அறநிலையத் துறை தரப்பில் சிறப்பு பிளீடர் அருண் நடராஜன் ஆஜராகி, ''கோவில் அமைந்திருந்த பகுதியில் வைக்கப்பட்டிருந்த குப்பை தொட்டிகள் அகற்றப்பட்டு விட்டன; மீண்டும் கோவில் கட்டித் தரப்படும். இதற்கான பணிகள் நடந்து வருகிறது,'' என்றார்.

இதைப் பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us