ADDED : ஜூலை 18, 2024 12:22 AM

மெரினா, மெரினா லுாப் சாலையில், அசைவ பிரியர்களை கவரும் வகையில், 30க்கும் மேற்பட்ட உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இங்கு விற்பனை செய்யப்படும் மீன் வகைகளை சுவைக்க, சென்னை சுற்றுவட்டாரத்தில் உள்ள பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வருகின்றனர்.
நாளுக்கு நாள் மவுசு கூடுவதை பயன்படுத்திக் கொண்ட உணவக உரிமையாளர்கள், முதலில் நடைபாதையை ஆக்கிரமித்தனர். தொடர்ந்து தற்போது, சாலையில் நாற்காலிகளை அமைத்து, வாடிக்கையாளர்களை அமர வைத்து உணவு பரிமாறி வருகின்றனர்.
இதனால், இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதுகுறித்து வாகன ஓட்டிகள் கூறியதாவது:
சாந்தோம் நெடுஞ்சாலையில் மெட்ரோ ரயில் பணி நடந்து வருவதால், காந்தி சிலையிலிருந்து அடையாறு நோக்கிச் செல்லும் வாகனங்கள் அனைத்தும், மெரினா லுாப் சாலை வழியாக திருப்பிவிடப்பட்டு உள்ளன.
ஒருவழிச் சாலையாக இருந்தாலும், தினசரி 'பீக் ஹவர்ஸ்' நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதற்கு காரணமே, சாலையை ஆக்கிரமித்து இங்கு இயங்கி வரும் அசைவ உணவகங்கள் தான்.
எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.