/உள்ளூர் செய்திகள்/சென்னை/ நெரிசலில் ஓட்டை பஸ்கள் ஓட்டுவதில் சிரமம் ஓட்டம்! 450 தற்காலிக ஓட்டுனர்களில் 100 பேர் 'எஸ்கேப்' நெரிசலில் ஓட்டை பஸ்கள் ஓட்டுவதில் சிரமம் ஓட்டம்! 450 தற்காலிக ஓட்டுனர்களில் 100 பேர் 'எஸ்கேப்'
நெரிசலில் ஓட்டை பஸ்கள் ஓட்டுவதில் சிரமம் ஓட்டம்! 450 தற்காலிக ஓட்டுனர்களில் 100 பேர் 'எஸ்கேப்'
நெரிசலில் ஓட்டை பஸ்கள் ஓட்டுவதில் சிரமம் ஓட்டம்! 450 தற்காலிக ஓட்டுனர்களில் 100 பேர் 'எஸ்கேப்'
நெரிசலில் ஓட்டை பஸ்கள் ஓட்டுவதில் சிரமம் ஓட்டம்! 450 தற்காலிக ஓட்டுனர்களில் 100 பேர் 'எஸ்கேப்'
ADDED : ஜூன் 25, 2024 11:13 PM

சென்னை : சென்னையில் போக்குவரத்து நெரிசல், பணிமனையில் உள்ள ஓட்டுவதற்கு தகுதியற்ற பேருந்துகள், மோசமான சாலைகள், விதிமீறல் உள்ளிட்ட காரணங்களால், மாநகர பேருந்துகளை சரிவர தற்காலிக ஓட்டுனர்களால் இயக்க முடியவில்லை. இதன் காரணமாக, சமீபத்தில் 100க்கும் மேற்பட்டோர் வேலைக்கு வராமல் ஓட்டம் பிடித்துள்ளனர்.
தமிழகத்தில் உள்ள எட்டு அரசு போக்குவரத்து கழகங்களில் டிரைவர், கண்டக்டர், மெக்கானிக்கல் பிரிவு என, 1.21 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். தமிழக அரசு போக்குவரத்துக் கழகங்களில், ஒவ்வொரு பணிமனைகளிலும் காலி பணியிடங்கள் ஏராளமாக உள்ளன.
அழுத்தம்
சில ஆண்டுகளாக நிரந்தர காலிப்பணியிடங்கள் நிரப்பாததால் டிரைவர், கண்டக்டர், பிரிவில் 30 சதவீதம் வரை ஆட்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அதேவேளையில் புது வழித்தடம், புது பேருந்துகள் என, அரசு அறிவிப்பு வெளியிடுகிறது. இது குறித்து சுற்றறிக்கை வெளியிடப்பட்டு, சம்பந்தப்பட்ட பணிமனை வாயிலாக பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
மேலிடத்தின் அழுத்தம் காரணமாக, விழிபிதுங்கும் பணிமனை அதிகாரிகளுக்கு, பெரும்பாலும் கைகொடுப்பது தற்காலிக ஊழியர்கள் தான்.
அதுமட்டுமல்லாமல், பொங்கல் உள்ளிட்ட பண்டிகை நாட்களில் வெளியூர் பயணியரை கருத்தில் வைத்து கூடுதல் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. அந்த நேரத்திலும் இரவு, பகல் பாராது, ஏராளமான தற்காலிக ஊழியர்கள் பணியில் ஈடுபடுகின்றனர்.
தற்போது கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள், கல்லுாரிகள் திறக்கப்பட்டுள்ளதால், 1,000க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர்களை நியமனம் செய்து, பேருந்துகள் இயக்கப்படுகின்றன.
சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் மொத்தமுள்ள 32 பணிமனைகளில், ஒவ்வொரு பணிமனையிலும் தேவைக்கு ஏற்றார்போல், 10 முதல் 15 தற்காலிக ஓட்டுனர்கள் தேர்வு செய்யப்பட்டு, சில நாட்கள் பயிற்சி அளித்து, மாநகர பேருந்துகளை இயக்கி வருகின்றனர்.
அதிர்ச்சி
அந்த வகையில், சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் தேர்வு செய்யப்பட்ட 450 பேரில், இதுவரையில் 100க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர்கள் பணிக்கு வராமல் நின்று விட்டனர்.
தற்காலிக ஊழியர்களில் பெரும்பாலானோர் லோடு வேன், லாரி, கார் உள்ளிட்ட தனியார் வாகனங்களை இயக்கியவர்கள். அவர்கள், அரசு பணி என்ற காரணத்திற்காக பேருந்துகள் இயக்கத் துவங்கியதும், அதிர்ச்சி காத்திருந்தது.
சரியாத எரியாத முகப்பு விளக்கு, பிடித்தால் பேருந்து நிற்காத பிரேக், ஒழுகும் கூரை, உடைந்து விழும் படிக்கட்டுகள் உள்ளிட்டவற்றால், பயணியரிடம் இருந்து எதிர்ப்பை எதிர்கொள்வதோடு, பேருந்தை இயக்குவதில் கடும் சிரமத்தையும் சந்திக்கின்றனர்.
வேறு பேருந்து கேட்டால், 'அட்ஜெஸ்ட்' செய்து செல்லும்படி அதிகாரிகள் சமாளிக்கின்றனர். தீர்வை ஏற்படுத்தி தருவதில்லை.
பெரும்பாலான பிரதான சாலைகளில் மெட்ரோ ரயில் பணிகள், குடிநீர் வாரிய பணிகள், வடிகால் பணிகள் நடந்து வருவதால், பெரும்பாலான பிரதான சாலைகள் மோசமான நிலையில், கடுமையான போக்குவரத்து நெரிசலையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது.
அந்த சாலைகளில், பழைய பேருந்துகளை சமாளித்து ஓட்ட முடியாமல், வேலையை விட்டு சென்று விட்டதாக, இன்னொரு தரப்பினர் கூறுகின்றனர்.
சலுகை இல்லை
இது குறித்து மாநகர பேருந்து ஓட்டுனர்கள் சிலர் கூறியதாவது:
ஒவ்வொரு பணிமனையிலும் ஏற்படும் பற்றாக்குறைக்கு ஏற்ப, 10 முதல் 15 தற்காலிக ஓட்டுனர்களை தேர்வு செய்து, ஓரிரு நாட்களுக்கு பயிற்சி அளித்து, பின்னர் பணி வழங்கப்பட்டது.
ஆனால், அவர்களால் சென்னையில் தற்போதுள்ள போக்குவரத்து நெரிசல், மோசமான சாலைகளால், பழைய பேருந்துகளை வைத்துக் கொண்டு, நிர்வாகம் குறிப்பிடும் நேரத்தில் மாநகர பேருந்துகளை இயக்க முடியவில்லை.
மேலும், தற்காலிக ஓட்டுனர்களுக்கு உரிய சான்றிதழ் போன்ற எந்த அங்கீகாரமும் இல்லை. இதனால், தற்காலிக ஓட்டுனர்கள் பணிக்கு வரும் வேகத்திலேயே, திரும்பிச் சென்று விடுகின்றனர்.
சிலர் பணிமனையில் இருந்து பேருந்தை எடுத்து, அடுத்து வரும் பிரதான பேருந்து நிலையங்களில் பேருந்தை நிறுத்திவிட்டு ஓடிய சம்பவங்களும் நடந்துள்ளன.
இவர்களுக்கு போக்குவரத்து கழக நிரந்தர ஊழியர்களை போல ஊதியமோ, இதர சலுகைகளோ இல்லை. புதிதாக பணியில் சேருவோருக்கு, ஓய்வூதியம் உள்ளிட்ட சிறப்பு சலுகைகள் இல்லாததாலும், அரசு பணியில் உள்ள ஆர்வம் குறைந்து வருகிறது. எனவே, நிர்வாகம் நிரந்தர பணியாளர்களை நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
மாநகர போக்குவரத்து கழகத்தில் 450க்கும் மேற்பட்ட தற்காலிக ஓட்டுனர்களை தேர்வு செய்தோம். அனைத்து ஓட்டுனர்களாலும் சென்னை மாநகரில் பேருந்தை ஓட்டி செல்ல முடியாது. தேர்வு செய்தவர்களில், 100க்கும் மேற்பட்டோர் பணியை விட்டு சென்று விட்டனர். இருப்பினும், புதிதாக ஆட்களை தேர்வு செய்து, பாதிப்பு இல்லாமல் பேருந்துகளை இயக்கி வருகிறோம்.
- மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள்.
1,000க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பு
போக்குவரத்து
ஊழியர்களை அரசு ஊழியர்களாக்க வேண்டும்; 15வது புது ஊதிய ஒப்பந்தத்தை
ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தி அ.தொ.பே., சார்பில்
பல்லவன் இல்லத்தில் நேற்று நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை தலைவர் ராசு
தலைமை வகித்தார்.
பேரவை செயலர் கமலக்கண்ணன் முன்னிலை வகித்தார்.
இதில், 1,000க்கும் மேற்பட்டோர் பங்கேற்று, கோரிக்கையை வலியுறுத்தி
முழக்கங்களை எழுப்பினர். இதையடுத்து, கோட்டையை நோக்கி பேரணியாக செல்ல
முயன்ற தொழிற்சங்கத்தினரை, போலீசார் தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து,
பேரவைச் செயலர் கமலகண்ணன், தலைவர் ராசு உள்ளிட்டோர் போக்குவரத்து துறைச்
செயலரை தலைமைச் செயலகத்தில் சந்தித்து மனு அளித்தனர்.
இது குறித்து கமலகண்ணன் கூறியதாவது:
அரசு
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் நீண்ட நாள் கோரிக்கை குறித்து, பல்வேறு
கட்ட ஆர்ப்பாட்டங்களை நடத்திய பிறகும், அரசு அதன் மீது எந்த நடவடிக்கையும்
எடுக்கவில்லை.
தி.மு.க., ஆட்சி பொறுப்புக்கு வந்த 100 நாட்களில்
பிரச்னைகளை தீர்த்து விடுவதாக தேர்தல் வாக்குறுதி அளித்தனர். ஆனால், மூன்று
ஆண்டுகளாகியும் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்களுக்கு
அகவிலைப்படி உயர்த்தி பல மாதங்களுக்குப் பிறகே போக்குவரத்து
தொழிலாளர்களுக்கு டி.ஏ., உயர்த்தப்படுகிறது. போக்குவரத்து ஊழியர்களை அரசு
ஊழியர்களாக்க வேண்டும், ஓட்டுனர், நடத்துனர் நியமனத்துக்கு டெண்டர்
விடப்படுகிறது. சமூக நீதி பாதிக்கப்படும் இம்முறையை விடுத்து நேரடி நியமனம்
செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.