Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ காஞ்சி மேயர் பதவி தப்புமா? 29ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு!

காஞ்சி மேயர் பதவி தப்புமா? 29ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு!

காஞ்சி மேயர் பதவி தப்புமா? 29ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு!

காஞ்சி மேயர் பதவி தப்புமா? 29ம் தேதி நம்பிக்கை ஓட்டெடுப்பு!

ADDED : ஜூலை 10, 2024 12:30 AM


Google News
Latest Tamil News
காஞ்சிபுரம்,காஞ்சிபுரம் தி.மு.க., மேயர் மகாலட்சுமி மீது, 33 கவுன்சிலர்கள் கொண்டுவந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது, வரும் 29ம் தேதி, ஓட்டெடுப்பு நடைபெறும் என, கமிஷனர் செந்தில்முருகன் அறிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு, 2022ல் நடந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், 51 வார்டுகளுக்கு கவுன்சிலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

மேயராக தி.மு.க.,வைச் சேர்ந்த ஒன்பதாவது வார்டு கவுன்சிலரான மகாலட்சுமியும், துணைமேயராக காங்., கட்சியைச் சேர்ந்த குமரகுருநாதனும் தேர்வு செய்யப்பட்டனர்.

ஓராண்டிலேயே மேயர் மற்றும் தி.மு.க., கவுன்சிலர்கள் இடையே ஒப்பந்த விவகாரங்களும், அதிகார போட்டியும் தலைதுாக்கின. தி.மு.க.,வின் அதிருப்தி கவுன்சிலர்கள், மேயரின் கணவர் தலையீடு இருப்பதாக குற்றஞ்சாட்டி வந்தனர்.

தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் மட்டுமின்றி, அ.தி.மு.க., - - காங்., - சுயேச்சை என, 33க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள், மேயருக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தினர். அதிருப்தி தி.மு.க., கவுன்சிலர்களை அழைத்து, அமைச்சர் நேரு, மாவட்ட செயலர் சுந்தர் என, மூத்த நிர்வாகிகள் பேச்சு நடத்தியும், உடன்பாடு ஏற்படவில்லை.

இதைத் தொடர்ந்து, மேயர் மகாலட்சுமி மீது நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர, கலெக்டர் கலைச்செல்வியிடம் கடந்த மாதம் 7ம் தேதி, 33 கவுன்சிலர்கள் மனு அளித்தனர். இவர்களில், தி.மு.க., அதிருப்தி கவுன்சிலர்கள் - 17, அ.தி.மு.க., -- 7, கவுன்சிலர்கள், சுயேச்சைகள் - 5, பா.ம.க,, காங்., மற்றும் பா.ஜ., தலா ஒருவர்.

மீதமுள்ள 18 கவுன்சிலர்களில், மேயருக்கு ஆதரவாக 13 தி.மு.க., கவுன்சிலர்கள் உள்ளனர். தி.மு.க., கவுன்சிலர்கள் இருவர் நடுநிலை வகிக்கின்றனர். அ.தி.மு.க., கவுன்சிலர்கள் முடிவு ரகசியமாக உள்ளது.

இந்நிலையில், மேயர் மகாலட்சுமி மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வருவது மற்றும் மேயரின் பதவி மீதான ஓட்டெடுப்பு நடத்துவதற்கான கூட்டம், வரும் 29ம் தேதி, காலை 10:00 மணிக்கு, அண்ணா அரங்கின் முதல் மாடியில், மாநகராட்சி கூட்டரங்கில் நடைபெறும் என, மாநகராட்சி கமிஷனர் செந்தில்முருகன், அனைத்து கவுன்சிலர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.

ஓட்டெடுப்பில் வெற்றி பெற 50 கவுன்சிலர்களில், 40 பேரின் ஆதரவு தேவை.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us