Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சென்னை/ சாதாரண மழைக்கு தண்ணீர் தேங்காது தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உறுதி

சாதாரண மழைக்கு தண்ணீர் தேங்காது தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உறுதி

சாதாரண மழைக்கு தண்ணீர் தேங்காது தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உறுதி

சாதாரண மழைக்கு தண்ணீர் தேங்காது தலைமை செயலர் சிவ்தாஸ் மீனா உறுதி

ADDED : ஜூன் 09, 2024 01:36 AM


Google News
Latest Tamil News
சென்னை:சென்னை முரேஸ் கேட் சாலையில் இருந்து, லஸ் சர்ச் சாலை, கச்சேரி சாலை வழியாக, பகிங்ஹாம் கால்வாய் வரை, 2,200 மீ., நீளத்திற்கு வடிகால் அமைக்கப்படுகிறது.

தேனாம்பேட்டை மண்டலம், மாம்பலம் கால்வாயில், சீர்மிகு நகர திட்ட நிதியின் கீழ் 59.42 கோடி ரூபாயில், 3,065 மீ., நீளத்திற்கு மேம்பாட்டு பணிகள் நடக்கின்றன.

ராயபுரம் மண்டலம், பூந்தமல்லி பிரதான சாலையில், காந்தி இர்வின் பாலம் சாலை அருகே, 5.50 கோடி ரூபாயில், மழைநீர் வடிகால் அமைக்கப்படுகிறது. வில்லிவாக்கம் ஏரியில், 7.90 கோடி ரூபாயில் பணிகள் நடந்து வருகின்றன.

இப்பணிகளை, தலைமைச் செயலர் சிவ்தாஸ் மீனா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். சென்னை மாநகராட்சி கமிஷனர் ராதாகிருஷ்ணன், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் கார்த்திகேயன் மற்றும் அலுவலர்கள் உடனிருந்தனர்.

ஆய்வு குறித்து, தலைமைச் செயலர் சிவ்தாஸ்மீனா கூறியதாவது:

சென்னையில் மெட்ரோ ரயில் பணிகள் நடக்கின்றன. பணியின்போது கழிவு நீர் கால்வாய் சேதமடைந்தால், மாற்று வழி ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளோம்.

நெடுஞ்சாலைத்துறை, நீர்வளத்துறை, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம், ரயில்வே துறை போன்றவை இணைந்து பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தற்போது சென்னையில், சாதாரண மழை இருந்தால் பிரச்னை இருக்காது. அதாவது 24 மணி நேரத்தில் 20 செ.மீ., மழை வரை இருந்தால் பிரச்னை இருக்காது. எதிர்பார்க்காத அளவு அதிக மழை வந்தால், சில இடங்களில் தண்ணீர் தேங்கும்.

அவ்வாறு தண்ணீர் தேங்கினால், அதை வெளியேற்ற வேறு நடவடிக்கை எடுக்கப்படும். சாதாரண மழையை எதிர்கொள்ள, தயாராக இருக்கிறோம். சென்னை மையப் பகுதியில், 99 சதவீதப் பணிகள் முடித்து விட்டோம்.

கடந்த ஆண்டு 350 கோடி ரூபாயில் பணிகளை துவக்கினோம். முக்கியமான பணிகளை முடித்து விட்டோம். இரண்டாம் கட்ட பணிகள் தற்போது நடக்கின்றன. இப்பணிகளும் ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிக்கப்படும்.

கொசஸ்தலை ஆறு திட்டப் பணிகள், அடுத்த ஆண்டுக்குள் முடிக்கப்படும். வட சென்னை பகுதியிலும் தொடர்ந்து பணிகள் நடந்து வருகின்றன. கொசஸ்தலை ஆற்றில் 760 கி.மீ., பணிகளில் 553 கி.மீ., பணி முடிந்துள்ளது. கோவளம் திட்டப்பணி 158 கி.மீ., பணிகளில் 116 கி.மீ., பணி முடிந்துள்ளது.

இவ்வாறு, அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us