ADDED : ஜூலை 07, 2024 12:39 AM

பொன்னேரி, பொன்னேரி, தடப்பெரும்பாக்கம் கூட்டுச்சாலையில் உள்ள உணவகத்தில் பணி புரிபவர் ரமேஷ், 25. நேற்று முன்தினம் இரவு 11:00 மணிக்கு பணி முடிந்து, சக ஊழியர்கள் இருவருடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.
சிங்கிலிமேடு கிராம சாலை அருகே, ஐந்து பேர் கும்பல் அவர்களிடம் அரிவாளை காட்டி பணம் கேட்டு மிரட்டியது. தர மறுத்த ரமேஷின், தலை மற்றும் காதில் வெட்டி, மொபைல் போனை பறித்தது. ரமேஷுடன் வந்த ஊழியர்கள் சத்தம் போடவே, வழிப்பறி திருடர்கள் அங்கிருந்து தப்பினர்.
படுகாயமடைந்த ரமேஷுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது. வழிப்பறி திருடர்கள் குறித்து பொன்னேரி போலீசார் விசாரிக்கின்றனர்.