Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை...ரணகளம் !:போதைப்பொருள் விற்பனையில் போட்டி

இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை...ரணகளம் !:போதைப்பொருள் விற்பனையில் போட்டி

இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை...ரணகளம் !:போதைப்பொருள் விற்பனையில் போட்டி

இருவரை கடத்தி கழுத்தறுத்து கொலை...ரணகளம் !:போதைப்பொருள் விற்பனையில் போட்டி

ADDED : ஜூலை 03, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
சென்னை:சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் போதைப்பொருள் விற்பனை கொடி கட்டிப்பறப்பதால், ரவுடி கும்பல்கள் இடையே போதைப்பொருள் விற்பனையில், கடும் போட்டி நிலவுகிறது. இதனால், கொலை உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்கின்றன. தாம்பரம் அருகே, போதைப்பொருள் விற்பனை விவகாரத்தில் ஏற்பட்ட தொழில் போட்டியில், நள்ளிரவில் வாலிபர்கள் இருவரை ஆட்டோவில் கடத்தி, கழுத்தறுத்து கொலை செய்த பயங்கரம் நடந்துள்ளது.

தாம்பரம் அடுத்த பெருங்களத்துார், குண்டுமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஹரி, 24; ஆட்டோ ஓட்டுனர்.

இவர், நேற்று அதிகாலை 2:45 மணியளவில், பதறியடித்தபடி பீர்க்கன்காரணை காவல் நிலையத்திற்கு சென்றார். அங்கு இரவு பணியிலிருந்த போலீசார் அவரிடம் விசாரித்தனர்.

அப்போது, 'மூன்று பேர் என் ஆட்டோவில் சவாரி ஏறி, பெருங்களத்துார் குண்டுமேடு பகுதிக்கு சென்றனர். வழியில் இருவரை ஆட்டோவில் ஏற்றி, சரமாரியாக தாக்கினர்.

பின், சுடுகாட்டு பகுதியில் கழுத்தை அறுத்து கொலை செய்து, என் ஆட்டோவுடன் தப்பிச் சென்றுவிட்டனர்' எனக் கூறியுள்ளார்.

போலீசார், ஆட்டோ ஓட்டுனருடன் குண்டுமேடு சுடுகாட்டிற்கு சென்று பார்த்தபோது, இரு வாலிபர்கள் கொடூரமாக கழுத்தறுக்கப்பட்டு, கொலை செய்யப்பட்டு கிடந்தனர். அவர்களின் உடல்களை கைப்பற்றி, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.

இது குறித்து, போலீசாரின் விசாரணையில் தெரிய வந்ததாவது:

புதுபெருங்களத்துார், டேவிட் நகரைச் சேர்ந்த சோனு என்கிற கோபாலகிருஷ்ணன், 21, கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை செய்து வந்துள்ளார்.

அதே பகுதியைச் சேர்ந்த, அவரது நண்பர்களான அண்ணாமலை, 22, 'ஜில்லா' என்கிற தமிழரசன், 22 ஆகியோர், கோபாலகிருஷ்ணனிடம் இருந்து போதைப்பொருட்களை வாங்கி, விற்பனை செய்து வந்துள்ளனர்.

ஒரு கட்டத்தில், கோபாலகிருஷ்ணனை அணுகாமல், இவர்கள் நேரடியாக வேறு இடத்தில் போதைப் பொருட்களை வாங்கி, விற்பனை செய்துள்ளனர். இதனால், அவர்களுக்குள் தொழில் போட்டி ஏற்பட்டு, முன்விரோதமாக மாறியுள்ளது.

நேற்று முன்தினம் மதியம், கோபாலகிருஷ்ணன் மனைவிக்கு அண்ணாமலை போன் செய்து, அவரை கொலை செய்யப்போவதாக மிரட்டியுள்ளார்.

இது தொடர்பாக பிரச்னை ஏற்பட்டு, நேற்று முன்தினம் மாலை, இரு தரப்பினரும் பேசி சமாதானத்திற்கு முயற்சித்துள்ளனர். இதில் மோதல் வலுத்துள்ளது.

ஆத்திரமடைந்த கோபாலகிருஷ்ணன், தொழில் போட்டி ஏற்படுத்திய இருவரையும் தீர்த்துக்கட்டும் முடிவுக்கு வந்தார். தன் கூட்டாளிகளை அழைத்துப்பேசி, திட்டத்தை நிறைவேற்ற தயாரானார்.

நேற்று முன்தினம் நள்ளிரவு, அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரியை தொடர்பு கொண்டு, சவாரிக்கு அழைத்துள்ளார். ஹரியின் ஆட்டோவில் கோபாலகிருஷ்ணன், அவரது நண்பர்கள் ஆரிப், 22, மதுரையைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர், கத்தி, இரும்புக்கம்பி உள்ளிட்ட ஆயுதங்களுடன் ஏறியுள்ளனர்.

இதுகுறித்து ஆட்டோ ஓட்டுனர் கேட்ட போது, அவரை மிரட்டியுள்ளனர். பின், குண்டுமேடு பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த அண்ணாமலை மற்றும் தமிழரசன் ஆகியோரை தாக்கி, ஆட்டோவில் ஏற்றியுள்ளனர். ஆட்டோவில் வைத்து அவர்களை, இரும்புக் கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளனர்.

குண்டுமேடு சுடுகாட்டிற்கு சென்றதும், கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். பின், ஆட்டோவை திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறுக்கு ஓட்டுமாறு, ஓட்டுனர் ஹரியை மிரட்டியுள்ளனர்.

இதில் பயந்துபோன ஹரி, 'காஸ்' நிரப்ப வேண்டும் எனக் கூறி, தாம்பரம், கிருஷ்ணா நரில் உள்ள 'பங்க்'கில் ஆட்டோவை நிறுத்திவிட்டு, தப்பித்து காவல் நிலையம் சென்று தகவல் கூறியுள்ளார்.

இவ்வாறு, விசாரணையில் தெரிந்தது.

போலீசார், கோபாலகிருஷ்ணனின் மொபைல் போன் எண்ணை தொடர்பு கொண்ட போது, 'சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. பீர்க்கன்காரணை போலீசார் தனிப்படை அமைத்து, கொலையாளிகளை தேடி வருகின்றனர்.

சென்னையில் சமீபகாலமாக, கஞ்சா, போதை மருந்து விற்பனையில் ரவுடி கோஷ்டிகள் இடையே, தொழில்போட்டி நிலவுகிறது.

போதைப்பொருள் விற்பனையில் ரவுடிகள் தலைமையில் செயல்பட்டு வந்தவர்கள், கூடுதல் லாபத்துக்காக, தனியாக தொழில் நடத்துகின்றனர். அத்துடன், தங்களுக்கென தனி கோஷ்டியையும் உருவாக்குகின்றனர்.

இதனால், தங்கள் வருமானம் பாதிப்பதாக கருதும் ரவுடிகள் ஆத்திரமடைகின்றனர்.

இது, ரவுடி கும்பல்களுக்கு இடையே கோஷ்டி மோதலை உருவாக்கி வருகிறது. பல அடிதடி, மோதல், கத்திக்குத்து சம்பவங்கள் கொலையில் முடிந்துள்ளன.

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வரும் ரவுடிகள் கும்பலை, கட்டுப்படுத்துவதில் போலீசார் திணறி வருகின்றனர்.

தனிப்படையில் 546 போலீசார்


சென்னை, ஆவடி, தாம்பரம் உள்ளிட்ட போலீஸ் கமிஷனர் அலுவலக எல்லைகளிலும், மண்டலங்களிலும் கஞ்சா விற்பனை, ரவுடிகளை கண்காணிக்க, டி.எஸ்.பி.,க்கள் தலைமையில், சிறப்பு தனிப்படை செயல்படுகிறது. இப்பணிக்காக, 546 போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள் விற்பனை கும்பல் மற்றும் ரவுடிகள் குறித்த தகவல்களுடன், அவர்களது சுய விபரங்களை புதுப்பித்து, மறுவகைப்படுத்தி உள்ளனர். இதன்படி கோபாலகிருஷ்ணனை தேடி வந்த நிலையில், இந்த இரட்டைக் கொலை நடந்துள்ளது. அவனை விரைவில் கைது செய்வோம்.

- போலீஸ் உயரதிகாரிகள்,

தாம்பரம் கமிஷனர் அலுவலகம்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us