Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/சூணாம்பேடு ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அவசியம்

சூணாம்பேடு ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அவசியம்

சூணாம்பேடு ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அவசியம்

சூணாம்பேடு ஊராட்சி பகுதியில் திடக்கழிவு மேலாண்மை அவசியம்

ADDED : பிப் 09, 2024 10:14 PM


Google News
Latest Tamil News
சூணாம்பேடு:சூணாம்பேடு ஊராட்சிக்குட்பட்ட மணப்பாக்கம், காவனுார், வில்லிப்பாக்கம், இல்லீடு போன்ற கிராமங்களில், 3,000த்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர்.

குப்பை அதிகம் தேங்கும் இடங்களில், ஊராட்சி நிர்வாகம் சார்பாக, துாய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ், குப்பை தொட்டிகள் அமைக்கப்பட்டு, அதில் தேங்கும் குப்பை துாய்மை பணியாளர்கள் மூலம் அகற்றப் படுகிறது.

பொதுமக்கள் மட்கும் குப்பை, மட்காத குப்பை என பிரித்து, துாய்மைப் பணியாளர்களிடம் வழங்க வேண்டும் என, அரசு அறிவுறுத்தி வருகிறது.

மட்காத குப்பையில் இருந்து மறுசுழற்சிக்கு தேவையான பொருட்களை பிரித்தெடுக்கவும், மட்கும் குப்பையிலிருந்து இயற்கை உரங்கள் தயாரிக்கவும், துாய்மை பணியாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் குப்பையை முறையாக பிரித்து வழங்காததாலும், ஊராட்சியில் முறையான திடக்கழிவு மேலாண்மை இல்லாததாலும், அனைத்து குப்பையும் தரம் பிரிக்காமல் நீர்நிலைப்பகுதியில் கொட்டப்படுகிறது.

இதனால், மழைக்காலங்களில் குப்பை தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு, நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதோடு, நீர் நிலைகள் மாசு அடைந்து வருகின்றன.

மேலும், அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, துாய்மை பாரத இயக்க அதிகாரி ஒருவர் கூறியதாவது:

சூணாம்பேடு ஊராட்சிக்கு, 15ம் நிதிக்குழு திட்டத்தின் கீழ், 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் திடக்கழிவு மேலாண்மைக் கூடம் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நீண்ட நாட்களாக கூடம் அமைக்க ஊராட்சி சார்பாக இடம் தேர்வு செய்யப்படாததால், பணி ரத்து செய்யப்பட்டது. தற்போது, மீண்டும் திடக்கழிவு மேலாண்மை கூடம் அமைக்க, அரசுக்கு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us