Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்குன்றம் தடத்தில் மினி பஸ் பகுதிவாசிகள் வேண்டுகோள்

செங்குன்றம் தடத்தில் மினி பஸ் பகுதிவாசிகள் வேண்டுகோள்

செங்குன்றம் தடத்தில் மினி பஸ் பகுதிவாசிகள் வேண்டுகோள்

செங்குன்றம் தடத்தில் மினி பஸ் பகுதிவாசிகள் வேண்டுகோள்

ADDED : ஜூன் 24, 2025 11:00 PM


Google News
மறைமலை நகர்,:சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் தடத்தில், 'மினி பஸ்' எனும் சிற்றுந்துகள் இயக்க வேண்டுமென, பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

சிங்கபெருமாள் கோவில் -- செங்குன்றம் சாலை 5 கி.மீ., துாரம் உடையது. இந்த சாலையை ஒட்டி செங்குன்றம், இந்திரா நகர், அலமேலுமங்காபுரம், நரசிங்கபுரம் காலனி உள்ளிட்ட குடியிருப்பு பகுதிகளில், 4,000க்கும் மேற்பட்ட வீடுகள், இரண்டு தனியார் பள்ளிகள், தொழிற்சாலைகள் உள்ளிட்டவை உள்ளன.

நாளுக்கு நாள் இப்பகுதிகளில், குடியிருப்புகள் அதிகரித்து வருகின்றன. மேலும், இந்த சாலை மெல்ரோசாபுரம் -- மருதேரி சாலையின் இணைப்பு சாலையாக உள்ளது.

இந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தங்களின் அடிப்படை தேவைகளுக்கு 3 கி.மீ., துாரம் உள்ள சிங்கபெருமாள் கோவில், நகராட்சி அலுவலகம், காவல் நிலையம் போன்ற இடங்களுக்கு, மறைமலை நகர் சென்று வரும் நிலை உள்ளது.

இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால், ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டு உள்ளது.

இது குறித்து அப்பகுதிவாசிகள் கூறியதாவது:

இந்த தடத்தில் பேருந்து வசதி இல்லாததால் வங்கி, மருத்துவம் உள்ளிட்ட தேவைகளுக்கு முதியவர்கள் மற்றும் பெண்கள் ஆட்டோக்களையே நம்பி உள்ளோம்.

சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையத்தில் இருந்து செங்குன்றம் வர, 150 ரூபாய் வரை ஆட்டோக்காரர்கள் கேட்கின்றனர்.

எனவே இந்த தடத்தில் சிங்கபெருமாள் கோவில் -- மறைமலை நகர் வரை, குறிப்பிட்ட கால இடைவெளியில் சிற்றுந்துகள் இயக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us