/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கல்பட்டு மாவட்டத்தில் 'மினி பஸ்' சேவை... துவங்கியது முதல் கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம் செங்கல்பட்டு மாவட்டத்தில் 'மினி பஸ்' சேவை... துவங்கியது முதல் கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 'மினி பஸ்' சேவை... துவங்கியது முதல் கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 'மினி பஸ்' சேவை... துவங்கியது முதல் கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
செங்கல்பட்டு மாவட்டத்தில் 'மினி பஸ்' சேவை... துவங்கியது முதல் கட்டமாக 11 வழித்தடங்களில் இயக்கம்
ADDED : ஜூன் 16, 2025 11:15 PM

செங்கல்பட்டு செங்கல்பட்டு மாவட்டத்தில் 50 தடங்களில் தனியார் சிற்றுந்து இயக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை நேற்று துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுதும் 1999ம் ஆண்டு நகர்ப்புறங்களில் இருந்து கிராமப்புறங்களுக்கு தனியார் சிற்றுந்துகள் இயக்கப்பட்டன. அதன் பின், கடந்த சில ஆண்டுகளாக கிராமங்களுக்கு இயக்கப்பட்ட சிற்றுந்துகள் நிறுத்தப்பட்டன.
இதனால், கிராமப்புறங்களில் இருந்து நகர்ப்புறங்களுக்கு வரும் மக்கள் ஷேர் ஆட்டோக்களில் அதிக கட்டணம் செலுத்தி பயணம் மேற்கொண்டு வந்தனர். எனவே, கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களை இணைக்க, சிற்றுந்து இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இதையடுத்து, புதிய விரிவான சிற்றுந்துதிட்டம் குறித்து தமிழக அரசிதழில், கடந்தாண்டு ஜூன் மாதம் 14ம் தேதி வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த டிசம்பரில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில், பொது மக்கள் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்று தங்கள் கருத்துகளை தெரிவித்தனர். மாவட்டத்தில் 50 தடங்களில் தனியார் சிற்றுந்து இயக்க தமிழக அரசு அனுமதியளித்தது.
சிற்றுந்து இயக்க, 100க்கும் மேற்பட்டோர் விண்ணப்பித்து இருந்த நிலையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் அருண்ராஜ் முன்னிலையில் வழித்தட அனுமதி விண்ணப்பங்கள் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டன.
நேற்று காலை கலெக்டர் அலுவலகத்தில் முதற்கட்டமாக 11 வழித்தடங்களில் சிற்றுந்து சேவை துவக்க விழா, போக்குவரத்து துறை சார்பில் கலெக்டர் அருண்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி ஆகியோர் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, மக்களின் பயன்பாட்டிற்காக சிற்றுந்து சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.
இந்த சிற்றுந்துகள் செங்கல்பட்டு வித்யாசாகர் கல்லுாரி, உதயம்பாக்கம், கூடுவாஞ்சேரி பேருந்து நிறுத்தம், மறைமலை நகர் காவல் நிலையம், பெருந்தவாக்கம், மகேந்திரா வேல்ர்டு சிட்டி, கூட் ரோடு, குரோம்பேட்டை ரயில் நிலையம்.
மாடம்பாக்கம், களியப்பேட்டை, -சிங்கபெருமாள்கோவில், பரனுார் ரயில் நிலையம்,- மனப்பாக்கம் கோவில், -நெல்லிக்குப்பம், பண்ணையார்குப்பம், போந்துார் கூட் ரோடு, நெடுங்கால் கூட் ரோடு, மேல்மருவத்துார் ஆகிய வழித்தடங்களில் இயக்கப்படும்.
காயரம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து, மறைமலைநகர் சிப்காட் பகுதிகளுக்கு வேலைக்கு வந்து செல்ல போதுமான வாகன வசதிகள் இல்லை; கூடுவாஞ்சேரி வழியாக மாநகர பேருந்துகளில் வர வேண்டும். தற்போது புதிதாக சிற்றுந்து எங்கள் கிராமம் வழியாக செல்வதால் அலைச்சல் குறையும்.
--- எஸ்.வனிதா,
காயரம்பேடு தனியார் தொழிற்சாலை ஊழியர்.
சென்னையில் 11 சிற்றுந்து
சென்னையில் முதல் முறையாக தனியார் சிற்றுந்து சேவை நேற்று துவங்கப்பட்டது. முதல் கட்டமாக, 11 பேருந்துகள் மட்டுமே துவக்கப்பட்டுள்ளது.
சென்னை வடக்கு மண்டலத்துக்கு உட்பட்ட அம்பத்துார், பூந்தமல்லி, செங்குன்றம் உள்ளிட்ட பகுதிகளில் 33 வழித்தடங்கள், சென்னை தெற்கு மண்டலத்துக்கு உட்பட்ட சோழிங்கநல்லுார், திருவான்மியூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் 39 வழித்தடங்கள் என, 72 வழித்தடங்களில் தனியார் சிற்றுந்துகள் இயக்க அனுமதி வழங்கப்பட்டுஉள்ளன.
இதற்கிடையே, முதல்வர் ஸ்டாலின் நேற்று தஞ்சாவூரில் தனியார் சிற்றுந்து சேவையை துவக்கி வைத்தார். இதையடுத்து, அந்தந்த மாவட்டங்களில் அமைச்சர்கள் சிற்றுந்து சேவையை துவக்கி வைத்தனர்.
இதற்கிடையே, சென்னை கிண்டியில் உள்ள போக்குவரத்து ஆணையரக அலுவலகத்தில், மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், 11 சிற்றுந்துகளை கொடியசைத்து துவக்கி வைத்தார்.
தி.மு.க., - எம்.பி., தமிழச்சி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா உட்பட பலர் பங்கேற்றனர்.