Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/கந்தசுவாமி உற்சவர் ஊர்வலம் திருப்போரூரில் கோலாகலம்

கந்தசுவாமி உற்சவர் ஊர்வலம் திருப்போரூரில் கோலாகலம்

கந்தசுவாமி உற்சவர் ஊர்வலம் திருப்போரூரில் கோலாகலம்

கந்தசுவாமி உற்சவர் ஊர்வலம் திருப்போரூரில் கோலாகலம்

ADDED : பிப் 23, 2024 11:12 PM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், ஆண்டுதோறும் மாசி பிரம்மோற்சவ விழா, 13 நாட்கள் நடைபெறும். இதில், எட்டாம் நாள் விழாவில், உற்சவர் கந்தபெருமான், ஆலத்துார் கிராமத்திற்கு பரிவேட்டை செல்வார்.

ஆலத்துார் செல்லும் உற்சவர் ஊர்வலம் மறுநாள் திரும்பும்போது, தண்டலம், மேட்டுத்தண்டலம், பாரதி நகர், திருப்போரூர் சான்றோர் வீதி, நான்கு மாடவீதிகள் வழியாக கோவிலை சென்றடையும்.

இந்நிலையில், கடந்த ஆண்டு திருப்போரூர் பேரூராட்சி, 15வது வார்டு, படவட்டம்மன் கோவில் தெருவான ஆதிதிராவிடர் பகுதிக்கு வர வேண்டும் என, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி என்.சதீஷ்குமார், பட்டியலின மக்கள் வசிக்கும் பகுதியில் உற்சவர் வீதி உலா நடக்க வேண்டும். அதற்கான பாதுகாப்பை போலீசார் வழங்க வேண்டும் என, டி.ஆர்.ஓ.,விற்கு உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவுபடி, கடந்த ஆண்டு கந்தசுவாமி உற்சவர் வீதி உலா, 400 ஆண்டுகளுக்கு பின் போலீஸ் பாதுகாப்புடன் திருப்போரூர் ஆதிதிராவிடர் பகுதி படவட்டம்மன் கோவில் தெருவிற்கு சென்றது.

அதேபோல், இந்தாண்டு மாசி பிரம்மோற்சவ விழா, கடந்த 15ம் தேதி துவங்கியது. இதில், நேற்று முன்தினம், எட்டாம் நாள் உற்சவத்தில், உற்சவர் கந்தபெருமான் ஆலத்துார் கிராமத்திற்கு பரிவேட்டை சென்றார்.

மறுநாளான நேற்று திரும்பும்போது, தண்டலம், மேட்டுத்தண்டலம், பாரதி நகர் பகுதிகளுக்கு சென்று, மாலை 5:00 மணியளவில், திருப்போரூர் ஆதிதிராவிடர் பகுதி படவட்டம்மன் கோவில் தெருவிற்கு சென்றது.

சட்டம் -- ஒழுங்கு பிரச்னை ஏதும் ஏற்படாமல் இருக்க, 100க்கும் மேற்பட்ட போலீசார் உற்சவர் தேருடன் பாதுகாப்புக்கு வந்தனர்.

அப்பகுதி பெண்கள் உட்பட அனைவரும் மலர் துாவி, பட்டாசு வெடித்து, மேள தாளத்துடன் கந்தபெருமானை ஊர்வலமாக அழைத்து சென்றனர்.

பின், படவட்டம்மன் கோவில் அருகே உற்சவர் தேரை நிறுத்தினர். அங்கு 108 தேங்காய் உடைத்து, பெண்கள் சீர்வரிசை படைத்து, அர்ச்சனை செய்து அப்பகுதிவாசிகள் வழிபட்டனர்.

அதன் பின், உற்சவர் தேர் திருப்போரூர் சான்றோர் வீதி, கச்சேரி சந்து தெரு, நான்கு மாடவீதி வழியாக கோவிலுக்கு சென்றது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us