Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா

மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய நிறுவனத்தில் சர்வதேச யோகா தின விழா

ADDED : ஜூன் 22, 2025 02:23 AM


Google News
Latest Tamil News
திருப்போரூர்:திருப்போரூர் முட்டுக்காட்டில் மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம், மாற்றுத்திறனாளிகள் மேம்பாட்டு துறையின் கீழ் செயல்படும் ஒன்றுக்கும் மேற்பட்ட ஊனமுற்றோரின் மேம்பாட்டிற்கான தேசிய நிறுவனம் செயல்படுகிறது.

இந்நிறுவனத்தில் சர்வதேச யோகா தினம் நேற்று கொண்டாடப்பட்டது.

இதில், யோகா வழியில் ஒரே பூமி, ஒரே ஆரோக்கியம் என்ற தலைப்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுஇருந்தன.

நிறுவன இயக்குநர் நசிகேதா ரவுட் தலைமை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய அரசின் முன்னாள் தேசிய தகவல் மைய மூத்த இயக்குநர் குப்புசாமி பங்கேற்றார்.

மாற்றுத்திறனாளிகள் சிறப்பு பள்ளி சார்ந்த 10க்கும் மேற்பட்ட பள்ளிகளிலிருந்தும் மாணவ - மாணவியர், பெற்றோர் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

அவர்களுக்கு, செங்கல்பட்டில் இயங்கிவரும் சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன யோகா பயிற்சியாளர், மருத்துவர்கள் ஜெபாலின் ஜோஸ்கோ, ஐஸ்வர்யா, பவித்ரா, யோகப்ரியா ஆகியோர் யோகாசன செய்முறை வகுப்பு நடத்தினர்.

மாமல்லபுரம்


மாமல்லபுரம் சுற்றுலா பகுதியில், பல்வேறு துறையினர் விமரிசையாக யோகா நிகழ்த்தினர். இங்குள்ள கடற்கரை கோவில் புல்வெளியில், இந்திய விமான படை குழுவினர்; ஐந்து ரதங்கள் சிற்ப பகுதியில், செங்கல்பட்டு, சர்வதேச யோகா மற்றும் இயற்கை மருத்துவ அறிவியல் நிறுவன குழுவினர்; மாமல்லபுரம் அடுத்த, சாலவான்குப்பம், புலிக்குகை எனப்படும் அதிரசண்ட குடவரை பகுதியில், இந்திய சுற்றுலா அமைச்சகத்தினர், யோகா நிகழ்த்தினர்.

யோகா பயிற்றுனர்கள், உடலுக்கும், மனதிற்கும் புத்துணர்வையும், ஆரோக்கிய பயன்களையும் அளிக்கும் சூரிய நமஸ்காரம், மூச்சுப் பயிற்சி, பல்வேறு ஆசனங்கள் உள்ளிட்டவற்றை, யோகா கலை பயிற்றுநர்கள் நிகழ்த்த, பங்கேற்பாளர்களும் பின்பற்றினர்.

புலிக்குகை வளாகத்தில், பிரதமர் மோடி பங்கேற்பு யோகா நிகழ்வு திரையிடப்பட்டது.

தொல்லியல் துறை உதவி கண்காணிப்பு பொறியாளர் அட்லுரி சத்யம், மாமல்லபுரம் பராமரிப்பு அலுவலர் ஸ்ரீதர், மத்திய சுற்றுலா அமைச்சக உதவி இயக்குநர் பத்மாவதி, நகராட்சித் தலைவி வளர்மதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மேலும், அர்ஜூனன் தபசு சிற்ப பகுதியில், மாமல்லபுரம் நகராட்சி ஊழியர்கள் யோகா நிகழ்த்தினர். பா.ஜ.,வினரும் யோகா நிகழ்த்தி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இந்நாளை முன்னிட்டு, மாமல்லபுரம் சிற்பங்களில், சுற்றுலா பயணியர் நேற்று இலவசமாக அனுமதிக்கப்பட்டனர்.

கல்பாக்கம்


கல்பாக்கத்தில், அணுசக்தி துறையின் பல்வேறு பிரிவினர், கேந்திரிய, அணுசக்தி பள்ளி மாணவ - மாணவியர் யோகா நிகழ்த்தினர்.

அச்சிறுபாக்கம் ஒன்றியத்திற்கு உட்பட்ட திருமுக்காடு ஊராட்சி மன்ற அலுவலக வளாகத்தில், சர்வதேச யோகா தினத்தில், யோகா ஆசிரியர்களால் சூரிய நமஸ்காரம், யோகாசனம், மூச்சுப் பயிற்சி உள்ளிட்ட யோகா நிகழ்ச்சி நடத்தப்பட்டது.

இதில், ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us