Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ பெட்ரோல் ஊற்றி வீடு எரிப்பு நிலத்தகராறில் வெறிச்செயல்

பெட்ரோல் ஊற்றி வீடு எரிப்பு நிலத்தகராறில் வெறிச்செயல்

பெட்ரோல் ஊற்றி வீடு எரிப்பு நிலத்தகராறில் வெறிச்செயல்

பெட்ரோல் ஊற்றி வீடு எரிப்பு நிலத்தகராறில் வெறிச்செயல்

ADDED : மே 30, 2025 11:17 PM


Google News
Latest Tamil News
கடப்பாக்கம்:செய்யூர் அருகே, கோட்டைக்காடு கிராமத்தில், நிலத்தகராறு காரணமாக பெட்ரோல் ஊற்றி வீடு எரிக்கப்பட்டதில், வீட்டு உபயோக பொருட்கள் எரிந்து நாசமாகின. அதிர்ஷ்டவசமாக மூவர் உயிர் தப்பினர்.

செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கோட்டைக்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் பாக்யராஜ், 43; மாற்றுத்திறனாளி.

இவருக்கும், பக்கத்து வீட்டுக்காரர் பார்த்திபன், 35, என்பவருக்கும் நீண்ட நாட்களாக, நிலத்தகராறு இருந்து வந்துள்ளது.

சில நாட்களுக்கு முன், கம்பி வேலி அமைப்பது குறித்து, இரு வீட்டினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

நேற்று முன்தினம் இரவு 1:30 மணியளவில், பாக்யராஜ் தன் பெண் குழந்தைகள் இருவருடன் வீட்டில் துாங்கியுள்ளார்.

இவரது மனைவி பணிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த பார்த்திபன், வீட்டின் வெளிப்பக்கத்தில் தாழ்ப்பாள் போட்டு, கூரை வீட்டின் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார்.

வீடு தீப்பற்றி எரிவதைக் கண்ட பாக்யராஜ் குடும்பத்தினர் அலறியவுடன், அக்கம் பக்கத்தினர் வந்த போது பார்த்திபன் மற்றும் அவருடன் வந்த மர்ம நபர்கள், அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர்.

உடனே, அக்கம் பக்கத்தினர் வீட்டைத் திறந்து, உள்ளே இருந்த மூவரையும் மீட்டனர்.

தீயை அணைப்பதற்குள், குடிசை முழுதும் எரிந்து, வீட்டில் இருந்த 'டிவி, பிரிஜ், பீரோ', இரு சக்கர வாகனங்கள், வீட்டு உபயோக பொருட்கள், ஆவணங்கள் மற்றும் 30,000 ரூபாய் உள்ளிட்டவை தீயில் கருகி நாசமாகி உள்ளன.

இதுகுறித்து பாக்யராஜ், சூணாம்பேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் பார்த்திபனை கைது செய்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us