Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/10 சிக்னல் அமைத்தும் பயனில்லை...நெரிசல்:செங்கை நகரில் தொடரும் அவதி

10 சிக்னல் அமைத்தும் பயனில்லை...நெரிசல்:செங்கை நகரில் தொடரும் அவதி

10 சிக்னல் அமைத்தும் பயனில்லை...நெரிசல்:செங்கை நகரில் தொடரும் அவதி

10 சிக்னல் அமைத்தும் பயனில்லை...நெரிசல்:செங்கை நகரில் தொடரும் அவதி

ADDED : ஜூன் 19, 2025 01:31 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு:செங்கல்பட்டு நகரில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த, 10 சிக்னல் அமைக்கப்பட்டது. இது பயன்பாட்டிற்கு வராததால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், காவல் கண்காணிப்பாளர் அலுவலகம், முதன்மை மாவட்ட நீதிமன்றம், அரசு சட்டக்கல்லுாரி அரசு மற்றும் தனியார் பள்ளிகள், வங்கிகள், தனியார் மருத்துவமனைகள், வர்த்தக நிறுவனங்கள் உள்ளன.

மாவட்ட கலெக்டர்அலுவலகத்திற்கு வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்திற்கு, கோரிக்கை மனுக்கள் அளிக்க பொதுமக்கள் மற்றும் வருவாய்த்துறை, வேளாண்மைத்துறை, மகளிர் திட்டம், கூட்டுறவுத்துறை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம், உள்ளிட்ட அனைத்து அலுவலகங்களுக்கும், பல்வேறு தேவைக்காக மக்கள் வருகின்றனர்.

ரயில் நிலையம் முக்கியசந்திப்பாக உள்ளதால், செங்கல்பட்டு நகரைச் சுற்றியுள்ள கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள், சென்னை உள்ளிட்ட பிற இடங்களுக்கு, விரைவு ரயில்கள் மற்றும் மின்சார ரயில்களில், தினமும் 10,000க்கும் மேற்பட்டவர்கள் சென்று வருகின்றனர்.

அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு, செங்கல்பட்டு மாவட்டம்இன்றி, காஞ்சிபுரம், விழுப்புரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் சிகிச்சை பெற்று வந்து செல்கின்றனர்.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள், அத்தியாவசிய தேவைக்காக பொதுமக்கள் வந்து செல்கின்றனர். தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில், பழைய பேருந்து நிலையம் முதல் அரசு மருத்துவக்கல்லுாரி வரை, கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

மாலை 6:30 மணியிலிருந்து 8:00 மணிவரை, பணிக்கு சென்றவர்கள் வீடு திரும்பும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

பிரச்னைகளுக்கு தீர்வுகாண, சிக்னல் அமைக்க வேண்டும் என, கலெக்டர் மற்றும் எஸ்.பி., ஆகியோரிடம், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

அதன்பின், கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழைய, புதிய பேருந்து நிலைய பகுதிகள், வேதாசலம் நகர் நுழைவாயில் பகுதிகளில், தனியார் பங்களிப்புடன் சிக்னல் அமைத்தனர். ஆனால், பயன்பாட்டிற்கு கொண்டுவராமல் கிடப்பில் போடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கடந்த ஆண்டு, போக்குவரத்து பிரிவு ஆய்வாளர் ஆனந்தராஜ் பொறுப்பேற்றவுடன், போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகான, சிக்னல் அமைக்கும் இடங்களை தேர்வு செய்து, எஸ்.பி., டி.எஸ்.பி., ஆகியோரிடம் ஆலோசனை நடத்தினர்.

அதன்பின், பழைய, புதிய பேருந்து நிலையம், வேதாசலம் நகர் நுழைவாயில், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை, திருமணி சாலை சந்திப்பு, சப் - கலெக்டர் அலுவலகம்.

ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாக பகுதி, மேலமையூர் ரயில்வே மேம்பாலம், திருப்போரூர் கூட்டுச்சாலை, புலிப்பாக்கம்.

காஞ்சிபுரம் சாலை, பச்சையம்மன் கோவில் ஆகிய பகுதிகளில், கடந்த ஆண்டு, அக்., மாதம், மகேந்திரா வேர்ல்டு சிட்டியில் உள்ள தனியார் நிறுவனங்களில், சமூக பொறுப்பு நிதி 5 லட்சம் ரூபாய் மதிப்பில், 10 சிக்னல்கள் அமைக்கப்பட்டன. இன்னும் பயன்பாட்டிற்கு வரவில்லை.

விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

செங்கல்பட்டு நகரில் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சிக்னல் அமைக்கப்பட்டது. தற்போது, சோதனை ஓட்டமாக, புதிய பேருந்து நிலையம், அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பகுதிகளில் நெரிசல் ஏற்படும் நேரங்களில், சிக்னல் பயன்படுத்தப்படுகிறது. மற்ற பகுதிகளில் சிக்னல் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

- போக்குவரத்து போலீசார், செங்கல்பட்டு.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us