ADDED : செப் 11, 2025 01:29 AM
மறைமலை நகர்:மறைமலை நகரில், 'காப்பர்' ஒயர் திருடிய நபரை, போலீசார் கைது செய்தனர்.
மறைமலை நகர் போலீசார் நேற்று முன்தினம் இரவு, ஜி.எஸ்.டி., சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மூவரை மடக்கிய போது, அதில் இருவர் தப்பிச் சென்றனர்.
ஒருவரை போலீசார் மடக்கிப் பிடித்து சோதனை செய்த போது, பல்வேறு இடங்களில் திருடப்பட்ட 'காப்பர்' ஒயர்கள் சிக்கின.
இதையடுத்து, அந்த நபரை கைது செய்து காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரித்தனர்.
இதில் பிடிபட்ட நபர், காட்டாங்கொளத்துார் அடுத்த காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்ரீராம்,27, என தெரிந்தது.
இவர் மீது, மறைமலை நகர் காவல் நிலையத்தில் வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரிந்தது.
இதையடுத்து ஸ்ரீ ராமை, செங்கல்பட்டு குற்றவியல் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவரிடமிருந்து, 20 கிலோ காப்பர் ஒயர்களை பறிமுதல் செய்தனர். தப்பிச் சென்ற இருவரை தேடி வருகின்றனர்.