Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ ஜி.எஸ்.டி., சாலையில் 7 நடை பாலங்கள் ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்

ஜி.எஸ்.டி., சாலையில் 7 நடை பாலங்கள் ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்

ஜி.எஸ்.டி., சாலையில் 7 நடை பாலங்கள் ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்

ஜி.எஸ்.டி., சாலையில் 7 நடை பாலங்கள் ஆகஸ்டில் பயன்பாட்டிற்கு திறக்க திட்டம்

ADDED : மே 28, 2025 12:43 AM


Google News
Latest Tamil News
வண்டலுார்:தாம்பரம் முதல் செங்கல்பட்டு வரையிலான ஜி.எஸ்.டி., சாலையில், வண்டலுார் முதல் சிங்கபெருமாள் கோவில் வரையிலான, 18 கி.மீ., துாரத்தில், ஏழு இடங்களில் பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் பேருந்து நிறுத்தங்கள் உள்ளன.

இந்த பேருந்து நிறுத்தங்களில், ஒரு முனையிலிருந்து எதிர் முனைக்கு செல்ல, பொதுமக்கள் சிரமப்பட்டனர்.

இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, குறிப்பிட்ட ஏழு இடங்களிலும், பொதுமக்கள் சாலையை எளிதாக கடக்க, தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில், உயர்மட்ட நடை பாலம் அமைக்க, கடந்த ஆண்டு முடிவு செய்யப்பட்டது.

அதன்படி வண்டலுார் இரணியம்மன் கோவில், வண்டலுார் ரயில் நிலையம், கிளாம்பாக்கம் டெக் பார்க், வள்ளியம்மாள் பொறியியல் கல்லுாரி, காட்டாங்கொளத்துார் சந்திப்பு, மறைமலை நகர் சந்திப்பு, சிங்கபெருமாள் கோவில் ரயில் நிலையம் ஆகிய ஏழு இடங்களில், உயர்மட்ட பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டு, 2024ல் பணிகள் துவக்கப்பட்டு நடந்து வருகின்றன.

இந்நிலையில், இப்பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டிய நிலையில், விரைவில் திறக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை நிர்வாகம் கூறியதாவது:

இந்த ஏழு உயர்மட்ட பாலங்கள், 13.59 கோடி ரூபாய் செலவில், முழுதும் இரும்பால் அமைக்கப்பட்டு வருகிறது. சாலையின் இரு பக்க இணைப்பிற்கு ஏற்ப, 150 அடி முதல் 157 அடி வரை பாலம் அமைக்கப்படுகிறது.

இதன் உயரம், தரை மட்டத்திலிருந்து 18 அடி என்ற அளவில் அமைக்கப்படுவதால், கன்டெய்னர் லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள், இடையூறின்றி பயணிக்கும்.

தவிர, அகலம் 10 அடி அளவில் உள்ளதால், பொதுமக்கள் நெருக்கடியின்றி நடந்து செல்ல முடியும். ஏழு பாலங்களிலும், படிக்கட்டுகள் தவிர மின் துாக்கி வசதியும் செய்யப்படுகிறது.

இதனால் மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், பெண்கள், முதியோர் உட்பட அனைவரும் எளிதாக பாலத்தில் ஏறி, சாலையைக் கடக்க முடியும்.

இதுகுறித்து, தேசிய நெடுஞ்சாலை நிர்வாக அதிகாரிகள் கூறுகையில்,'தற்போது, 80 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. ஆகஸ்ட் மாதம் அனைத்து பணிகளும் நிறைவடைந்து, பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும்' என்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us