Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ கால்நடை கிளை மருத்துவமனை கொளத்துாரில் அமைக்கப்படுமா?

கால்நடை கிளை மருத்துவமனை கொளத்துாரில் அமைக்கப்படுமா?

கால்நடை கிளை மருத்துவமனை கொளத்துாரில் அமைக்கப்படுமா?

கால்நடை கிளை மருத்துவமனை கொளத்துாரில் அமைக்கப்படுமா?

ADDED : ஜூலை 02, 2024 10:48 PM


Google News
மறைமலைநகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆப்பூர், வெங்கடாபுரம், கொளத்துார், குருவன்மேடு உள்ளிட்ட ஊராட்சிகளில், 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு, விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பு பிரதான தொழில்.

மறைமலை நகர், ஒரகடம் பகுதிகளில் உள்ள தொழிற்சாலைகளுக்கு செல்வோரும், வீட்டு பால் தேவை மற்றும் கூடுதல் வருமானத்திற்காக கால்நடைகள் வளர்த்து வருகின்றனர்.

இந்த கிராமங்களில், வெள்ளாடு, செம்மறி ஆடு, பசு, எருமை மாடுகள் என, 5,000க்கும் மேற்பட்ட கால்நடைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

இந்த கால்நடைகளுக்கு திடீர் உடல்நலக் குறைவு, செயற்கை கருவூட்டல் போன்ற சிகிச்சைக்கு, அருகில் அரசு கால்நடை மருத்துவமனை இல்லாததால், 10 கி.மீ., தொலைவில் உள்ள பாலுார் கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லும் நிலை உள்ளது.

இதுகுறித்து, கால்நடை வளர்ப்போர் கூறியதாவது:

கால்நடைகளுக்கு உடல் நலக்குறைவு, பசு மாடுகளுக்கு செயற்கை கருவூட்டல் போன்ற சிகிச்சைகளுக்கு பாலுார் மற்றும் சிங்க பெருமாள் கோவில் கால்நடை மருத்துவமனைக்கு, நீண்ட துாரம் நெடுஞ்சாலை மற்றும் ரயில்வே தண்டவாளங்களை கடந்து செல்ல வேண்டி உள்ளது.

இதனால், கால்நடைகள் மிரட்சி அடைகின்றன. நெடுஞ்சாலை ஓரம் கால்நடைகளை ஓட்டிச் செல்வது பெரும் சவாலாக உள்ளது.

சரக்கு வாகனங்களில் அழைத்துச் செல்லும் போது, கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, அனைத்து கிராம மக்களும் பயன்படுத்தும் வகையில், 5 கி.மீ., துாரத்திற்குள் உள்ள கொளத்துார் அல்லது வெங்கடாபுரம் ஊராட்சியில், அரசு கால்நடை கிளை மருத்துவமனை அமைக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us