Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கையில் நடைபாதை இடங்கள் கபளீகரம் அட்டூழியம் !

செங்கையில் நடைபாதை இடங்கள் கபளீகரம் அட்டூழியம் !

செங்கையில் நடைபாதை இடங்கள் கபளீகரம் அட்டூழியம் !

செங்கையில் நடைபாதை இடங்கள் கபளீகரம் அட்டூழியம் !

ADDED : ஜூலை 17, 2024 12:50 AM


Google News
Latest Tamil News
செங்கல்பட்டு செங்கல்பட்டு நகர சாலைகளில், நடைபாதைகளை ஆக்கிரமித்து நிறுத்தப்படும் தனியார் வாகனங்களால், இயல்பான வாகன போக்குவரத்துக்கே சிக்கலாகி வருகிறது. அதுமட்டுமின்றி, வியாபாரிகளும் தங்களின் கடைகளை மழைநீர் வடிகால்வாய் வரை நீட்டித்து விரிவுபடுத்தியுள்ளதால், நாளுக்கு நாள் நெரிசல் அதிகரித்து வருகிறது.

செங்கல்பட்டு -- திண்டிவனம் சாலையில், 300க்கும் மேற்பட்ட வணிக கட்டடங்கள் உள்ளன. மேலும், அரசு கலை கல்லுாரி, அரசு மருத்துவமனை, தாசில்தார் அலுவலகம், ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் உள்ளிட்ட முக்கிய அலுவலகங்கள், இந்த சாலையில் உள்ளன.

இந்த சாலையில், பழைய பேருந்து நிலையம், ரயில் நிலைய நுழைவு வாயில், நீதிமன்றம் நுழைவு வாயில், ராட்டினம் கிணறு பகுதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில், சாலை மற்றும் நடைபாதையை ஆக்கிரமித்து, கடைகள் வைக்கப்பட்டு உள்ளன.

இதன் காரணமாக, வார நாட்களில் காலை மற்றும் மாலை நேரங்களில், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.

சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:

இந்த சாலையில், மதுராந்தகம், அச்சிறுபாக்கம், திண்டிவனம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பல்வேறு கிராம மக்கள் பேருந்துகள், இருசக்கர வாகனங்களில் வந்து செல்கின்றனர்.

பண்டிகை நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்களில், அதிக அளவில் மக்கள் நடமாட்டம் இருக்கும். அந்த நேரங்களில், சாலை மற்றும் நடைபாதைகளை ஆக்கிரமித்து வாகனங்கள் நிறுத்தப்படுவதால், மற்ற வாகனங்கள் செல்லவோ, பாதசாரிகள் கடந்து செல்லவோ முடியாமல் நெரிசல் ஏற்படுகிறது.

அண்ணா சிலை, சக்தி வினாயகர் கோவில் - பொன்விளைந்தகளத்துார் சாலை சந்திப்பு வரை, நீதிமன்றத்திற்கு வரும் போலீசார், வழக்கறிஞர்களின் வாகனங்கள் நிறுத்தப்படுவதால், வார நாட்களில் காலை நேரங்களில், இந்த பகுதியை கடக்க சிரமமாக உள்ளது.

எனவே, நீதிமன்றத்திற்கு வரும் வாகனங்களுக்கு அருகில், காலியாக உள்ள மருத்துவமனை மைதானத்தில் பார்க்கிங் அமைத்தால், இந்த பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறையும். அதற்கு, மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

போலீஸ்காரர் ஒருவர் கூறியதாவது:

நடைபாதை ஆக்கிரமிப்புகளை எடுக்கும் போது, உள்ளூர் அரசியல் தலையீடு அதிக அளவில் உள்ளது. சில ஆண்டுகளுக்கு முன், சாலையின் இருபுறமும் கயிறு கட்டி வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்த முடியாதபடி போலீசார் நடவடிக்கை எடுத்தனர்.

வியாபாரிகளும் ஆதரவு அளித்தனர். ஆனால், இப்போது வியாபாரிகளின் ஆதரவு இல்லை. பல வியாபாரிகள் மழைநீர் வடிகால், நடைபாதை வரை தங்களின் கடைகளை விரிவுபடுத்தியுள்ளனர்.

சாலை ஓரம் நிறுத்தும் வாகனங்களுக்கு, போலீசார் அபராதம் விதித்து வருகின்றனர்.

அதே போல, நீதிமன்றத்திற்கு வரும் வாகனங்கள் நிறுத்த, அரசு கல்லுாரி மாணவர் விடுதி அருகில், பேவர்பிளாக் கற்கள் கொண்டு பார்க்கிங் அமைக்கப்பட்டது. அந்த இடமும் ஆக்கிரமிக்கப்பட்டு, கடைகளால் சூழப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us