Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ தரமற்ற முறையில் வீடு கட்டுமானம் லத்துார் பி.டி.ஓ., ஆபீஸ் முன் தர்ணா

தரமற்ற முறையில் வீடு கட்டுமானம் லத்துார் பி.டி.ஓ., ஆபீஸ் முன் தர்ணா

தரமற்ற முறையில் வீடு கட்டுமானம் லத்துார் பி.டி.ஓ., ஆபீஸ் முன் தர்ணா

தரமற்ற முறையில் வீடு கட்டுமானம் லத்துார் பி.டி.ஓ., ஆபீஸ் முன் தர்ணா

ADDED : ஜூலை 09, 2024 10:45 PM


Google News
பவுஞ்சூர்:கூவத்துார் அருகே வடபட்டினம் ஊராட்சியில், 30க்கும் மேற்பட்ட இருளர் இன மக்கள், வீட்டுமனைப் பட்டா மற்றும் சொந்த வீடு இல்லாமல், பல ஆண்டுகளாக அவதிப்பட்டு வந்தனர்.

அவர்கள் அனைவரும், இலவச வீட்டுமனைப் பட்டா மற்றும் தொகுப்பு வீடு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.

இந்நிலையில், பழங்குடியினர் மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 21 பயனாளிகளுக்கு, தலா 4.37 லட்ச ரூபாய் என, மொத்தம் 91 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் தொகுப்பு வீடு கட்ட, வடபட்டினம் பகுதியில் இடம் தேர்வு செய்யப்பட்டு, வீட்டு மனைப் பட்டாக்கள் வழங்கி, கடந்த ஆண்டு கட்டுமானப் பணிகள் துவங்கப்பட்டன.

நிறுத்தம்


ஆனால், 1 அடி ஆழம் மட்டும் கடக்கால் அமைத்து, வீடு கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டது. நீரோட்டம் அதிகம் உள்ள பகுதி என்பதால், எதிர்காலத்தில் மண் அரிப்பு ஏற்பட்டு, வீடுகள் இடியும் நிலை ஏற்படும்.

அதனால், தொடர்ந்து கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள, அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். பின் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இதையடுத்து, கடந்த ஜன., மாதம் மீண்டும் கட்டுமானப் பணிகள் துவங்கின. வீடுகளுக்கு தளம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தரமற்ற முறையில் வீடு கட்டப்பட்டதால், பக்கவாட்டுச் சுவர்கள் கை வைத்தாலே ஆடின.

இதே நிலையில் கட்டுமானப் பணி தொடர்ந்தால், மேல்தளம் இடிந்து விபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளது என, நம் நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து, மீண்டும் கட்டுமானப் பணிகள் நிறுத்தப்பட்டன.

இந்நிலையில், தற்போது வரை எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காததால், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் சார்பாக, நேற்று லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

தர்ணா


இதில், தரமற்ற முறையில் கட்டுமானப்பணி மேற்கொண்ட கான்ட்ராக்டர் மற்றும் கண்காணிக்கத் தவறிய அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் முழங்கினர்.

அதோடு, தரமற்ற முறையில் கட்டப்பட்டு உள்ள வீடுகளை முழுதும் அகற்றி விட்டு, புதிதாக தரமான வீடுகளை கட்டித்தர வேண்டும் என, வலியுறுத்தப்பட்டது.

வட்டார வளர்ச்சி அலுவலர் இல்லாததால், இதுகுறித்து லத்துார் வட்டார மேலாளரிடம் மனு அளித்து, தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று, எழுத்துப்பூர்வமாக வாக்குறுதி அளிக்க வேண்டும் என, மலைவாழ் மக்கள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர்.

அதற்கு, லத்துார் வட்டார மேலாளர் மறுத்ததால், லத்துார் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், 50க்கும் மேற்பட்டோர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us