/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/ செங்கை இயற்கை விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு செங்கை இயற்கை விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு
செங்கை இயற்கை விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு
செங்கை இயற்கை விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு
செங்கை இயற்கை விவசாயிகளுக்கு உழவர் சந்தையில் கடை ஒதுக்கீடு
ADDED : ஜூலை 28, 2024 01:50 AM

செங்கல்பட்டு:செங்கல்பட்டு உழவர் சந்தைகளில், இயற்கை விவசாயிகளுக்கு, விளைபொருட்கள் விற்பனை செய்ய தனிக்கடை ஒதுக்கி தரப்படும் என, கலெக்டர் அருண்ராஜ் தெரிவித்தார்.
செங்கல்பட்டு மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில், பாரம்பரிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தில், உயிர்ம வேளாண்மை கண்காட்சி மற்றும் கருத்தரங்கம், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
இதில், கலெக்டர் அருண்ராஜ் பங்கேற்று, உயிர்ம வேளாண்மை இடுபொருள் தயாரிப்பு கையேட்டை வெளியிட, வேளாண்மை இணை இயக்குனர் அசோக் பெற்றுக் கொண்டார்.
அதன்பின், கலெக்டர் அருண்ராஜ் பேசியதாவது:
பாரம்பரிய இயற்கை விவசாயத்தில் விளையக்கூடிய பொருட்களை, மக்கள் ஆர்வமாக வாங்கி பயன்படுத்துகின்றனர். சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், இயற்கை விளைபொருட்களை மக்கள் ஆர்வமாக வாங்கி வருகின்றனர்.
ரசாயன உரங்களை தவிர்த்து, இயற்கையான உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்யும்போது, அரிசி தரமாக கிடைக்கிறது. இதனால், உடல்நலம் பாதுகாக்கப்படுகிறது.
தமிழகத்திலேயே, செங்கல்பட்டு மாவட்டத்தில் இயற்கை விவசாயம் சாகுபடியை அதிகரிக்க, விவசாயிகள் முன்வர வேண்டும்.
மாவட்டத்தில் உள்ள ஒன்பது உழவர் சந்தைகளில், இயற்கை விவசாயிகள் விளைபொருட்களை விற்பனை செய்ய தனிக்கடை ஒதுக்கி தரப்படும்.
விவசாயிகள், தாங்கள் உற்பத்தி செய்த இயற்கை விளைபொருட்களை, வேளாண் விற்பனை துறை உதவியுடன், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் வாயிலாகவும் விற்பனை செய்து பயனடையலாம்.
இவ்வாறு அவர் பேசினார்.