ADDED : பிப் 25, 2024 08:55 PM

டொரன்டோ: சாலஞ்சர் டூர் ஸ்குவாஷ் தொடரில் இந்தியாவின் அபே சிங் சாம்பியன் பட்டம் வென்றார்.
கனடாவின் டொரன்டோவில் பி.எஸ்.ஏ., சேலஞ்சர் டூர் சர்வதேச ஸ்குவாஷ் தொடர் நடந்தது. இதன் பைனலில் இந்தியாவின் அபே சிங், வேல்சின் எலியாட் மோரிஸ் தேவ்ரெட் மோதினர். மொத்தம் 40 நிமிடம் நீடித்த போட்டியில் அபாரமாக ஆடிய அபே சிங் 3-0 (11-7, 11-9, 11-9) என்ற கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இது இவரது 8வது பி.எஸ்.ஏ., பட்டம். தவிர இந்த ஆண்டு இவர் வென்ற 2வது சேலஞ்சர் பட்டம். கடந்த ஜனவரி மாதம் மும்பையில் நடந்த சேலஞ்சர் தொடரில் கோப்பை வென்றிருந்தார்.
கடந்த ஆண்டு ஆசிய விளையாட்டில் ஒரு தங்கம் (அணி), ஒரு வெண்கலம் (கலப்பு இரட்டையர்) என இரண்டு பதக்கம் வென்ற அபே சிங், அடுத்த மாதம் கனடா ஓபனில் பங்கேற்க உள்ளார்.