ADDED : பிப் 24, 2024 09:54 PM

ரூர்கேலா: புரோ லீக் ஹாக்கி போட்டியில் இந்திய அணி 0-3 என 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் ஆஸ்திரேலியாவிடம் வீழ்ந்தது.
சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு சார்பில் புரோ லீக் ஹாக்கி 5வது சீசன் நடக்கிறது. மொத்தம் 9 அணிகள் பங்கேற்கின்றன. ஒடிசாவின் ரூர்கேலாவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியா அணிகள் மோதின. ஆட்டத்தின் 20வது நிமிடத்தில் இந்தியாவுக்கு கிடைத்த 'பெனால்டி கார்னர்' வாய்ப்பில் ஹர்மன்பிரீத் சிங் ஒரு கோல் அடித்தார். இதற்கு 23வது நிமிடத்தில் கிடைத்த 'பெனால்டி ஸ்டிரோக்' வாய்ப்பில் ஆஸ்திரேலியாவின் பிளேக் கோவர்ஸ் ஒரு கோல் அடித்து பதிலடி கொடுத்தார். உடனடியாக சுதாரித்துக் கொண்ட இந்தியாவுக்கு 29வது நிமிடத்தில் அமித் ரோஹிதாஸ் 'பெனால்டி கார்னர்' மூலம் ஒரு கோல் அடித்தார். முதல் பாதி முடிவில் இந்தியா 2-1 என முன்னிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட ஆஸ்திரேலியாவுக்கு 53வது நிமிடத்தில் டாம் கிரெய்க் ஒரு கோல் அடித்தார். ஆட்டநேர முடிவில் போட்டி 2-2 என 'டிரா' ஆனது. பின் 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் வெற்றியாளர் தீர்மானிக்கப்பட்டது. இதில் ஏமாற்றிய இந்தியா 0-3 என தோல்வியடைந்தது.
இதுவரை விளையாடிய 7 போட்டியில், 4 வெற்றி, 3 தோல்வி என 12 புள்ளிகளுடன் இந்திய அணி 4வது இடத்தில் உள்ளது.