Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/பிற விளையாட்டு/லவ்லினா, நிஷாந்த் தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில்

லவ்லினா, நிஷாந்த் தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில்

லவ்லினா, நிஷாந்த் தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில்

லவ்லினா, நிஷாந்த் தோல்வி: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில்

ADDED : ஆக 05, 2024 12:31 AM


Google News
Latest Tamil News
பாரிஸ்: பாரிஸ் ஒலிம்பிக் குத்துச்சண்டையில் இந்தியாவின் லவ்லினா, நிஷாந்த் தேவ் தோல்வியடைந்தனர்.

பிரான்சில் பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. பெண்களுக்கான குத்துச்சண்டை 75 கிலோ பிரிவு காலிறுதியில், டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற இந்தியாவின் லவ்லினா (வெண்கலம்), சீனாவின் லி கியான் (வெள்ளி) மோதினர். 'நடப்பு உலக சாம்பியன்' அந்தஸ்துடன் களமிறங்கிய லவ்லினா 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

ஆண்களுக்கான 71 கிலோ பிரிவு காலிறுதியில் இந்தியாவின் நிஷாந்த் தேவ், மெக்சிகோவின் மார்கோ வெர்டே மோதினர். இதில் ஏமாற்றிய நிஷாந்த் தேவ் 1-4 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

இப்போட்டியில் நிஷாந்துக்கு வழங்கப்பட்ட புள்ளி குறித்து சர்ச்சை எழுந்துள்ளது. முதலிரண்டு சுற்றில் ஆதிக்கம் செலுத்திய நிஷாந்த் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் மெக்சிகோ வீரர் வென்றதாக அறிவிக்கப்பட்டது அதிர்ச்சியாக இருந்தது.

இதுகுறித்து ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்ற விஜேந்தர் சிங் கூறுகையில், ''எப்படி புள்ளி வழங்குகின்றனர் என்று புரியவில்லை. சிறப்பாக விளையாடிய நிஷாந்த் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டிருக்க வேண்டும்,'' என்றார்.

இதன்மூலம் இம்முறை குத்துச்சண்டையில் இந்தியாவுக்கு ஒரு பதக்கம் கூட கிடைக்கவில்லை. ஏற்கனவே நிகாத் ஜரீன், அமித் பங்கல், பிரீத்தி பன்வர், ஜாஸ்மின் லம்போரியா ஏமாற்றினர்.

தடகளம்: பருல் சவுத்தரி '21'

பெண்களுக்கான 3000 மீ., 'ஸ்டீபிள்சேஸ்' ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் இந்தியாவின் பருல் சவுத்தரி 29, பங்கேற்றார். இலக்கை 9 நிமிடம், 23.39 வினாடியில் கடந்த இவர், 21வது இடம் பிடித்து பைனல் வாய்ப்பை இழந்தார். ஏற்கனவே இவர், 5000 மீ., ஓட்டத்தின் தகுதிச் சுற்றில் 14வது இடம் பிடித்து ஏமாற்றினார்.

* ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் இந்தியாவின் ஜெஸ்வின் ஆல்ட்ரின் 22, பங்கேற்றார். முதலிரண்டு வாய்ப்பில் தவறு செய்த இவர், 3வது வாய்ப்பில் 7.61 மீ., தாண்டினார். ஒட்டுமொத்தமாக 26வது இடம் பிடித்த ஜெஸ்வின் பைனல் வாய்ப்பை இழந்தார்.

துப்பாக்கி சுடுதல்: மகேஷ்வரி ஏமாற்றம்

பெண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 'ஸ்கீட்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் மகேஷ்வரி சவுகான், ரைசா தில்லான் பங்கேற்றனர். இரண்டு நாட்கள் நடந்த தகுதிச் சுற்றின் முடிவில் மகேஷ்வரி 118 புள்ளிகளுடன் (23, 24, 24, 25, 22) 14வது இடம் பிடித்தார். ரைசா 113 புள்ளிகளுடன் (21, 22, 23, 23, 24) 23வது இடம் பிடித்தார். இதனையடுத்து இருவரும் பைனல் வாய்ப்பை இழந்தனர்.

* ஆண்களுக்கான துப்பாக்கி சுடுதல் 25 மீ., 'ரேபிட் பயர் பிஸ்டல்' பிரிவு தகுதிச் சுற்றில் இந்தியாவின் விஜய்வீர் சித்து, அனிஷ் பன்வாலா பங்கேற்றனர். இரண்டு சுற்றுகளாக நடந்த தகுதிச் சுற்றில் விஜய்வீர், 583.26 புள்ளிகளுடன் 9வது இடம் பிடித்தார். அனிஷ், 582.22 புள்ளிகளுடன் 13வது இடம் பிடித்தார். இருவரும் பைனலுக்கு தகுதி பெறவில்லை.

மனு பாகருக்கு 'கொடி' கவுரவம்

பாரிஸ் ஒலிம்பிக் நிறைவு விழா அணிவகுப்பில் இந்திய மூவர்ணக்கொடியை ஏந்தி வரும் கவுரவம் மனு பாகருக்கு வழங்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சுடுதலில் ஆதிக்கம் செலுத்திய இவர், 10 மீ., 'ஏர் பிஸ்டல்' தனிநபர், கலப்பு அணிகள் பிரிவில் தலா ஒரு வெண்கலம் பெற்றுத்தந்தார். இதன்மூலம் சுதந்திர இந்தியாவில் ஒரு ஒலிம்பிக்கில் 2 பதக்கம் வென்ற முதல் இந்தியரானார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us