ADDED : பிப் 24, 2024 10:47 PM

பெங்களூரு: கடைசி பந்தில் சிக்சர் விளாசி வெற்றி தேடித்தந்த சஜனா, புதிய நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார்.
கேரளாவின் வயநாட்டில் உள்ள மனந்தவாடி கிராமத்தை சேர்ந்தவர் சஜனா. தந்தை சஜீவன் ஆட்டோ டிரைவர், தாயார் சாரதா, பஞ்சாயத்து கவுன்சிலர். சிறுவயதில் சஜனா, வீட்டு அருகில் உள்ள நிலத்தில் தென்னை மட்டையை வைத்து கிரிக்கெட் விளையாடினார்.
கல்லுாரியில் படித்த போது, 19 வயது மாவட்ட அணிக்காக தேர்வானார். 'ஆல் ரவுண்டரான' இவர், அடுத்து மாநில ஜூனியர் அணி கேப்டன் ஆனார். பின் இந்திய 'ஏ' அணியில் இடம் பெற்றார்.
2018ல் ஏற்பட்ட வெள்ளம், அடுத்து வந்த கொரோனா காலம், சஜனாவின் கிரிக்கெட் பயணத்துக்கு சிக்கல் தந்தது. இதில் இருந்து மீண்டு வந்த இவர், கடந்த ஆண்டு பெண்கள் பிரிமியர் லீக் (டபிள்யு.பி.எல்.,) ஏலத்தில் இடம் பெற்றார். யாரும் வாங்கவில்லை. இம்முறை ரூ. 15 லட்சத்துக்கு மும்பை அணி வாங்கியது.
டில்லிக்கு எதிராக முதல் போட்டியில் சஜனா களமிறங்கிய போது, மும்பை வெற்றிக்கு கடைசி பந்தில் 5 ரன் தேவைப்பட்டன. கேப்சே வீசிய பந்தை, சஜனா சிக்சருக்கு அனுப்பி 'திரில்' வெற்றி தேடித் தந்தார்.
சஜனா கூறுகையில்,'' மாவட்ட அணிக்காக தேர்வான போது, போக்குவரத்து செலவுக்கு கூட பணமில்லாமல் தவித்தேன். ஒரு போட்டிக்கு தினமும் ரூ. 150 தருவர். பின் ரூ. 300 அடுத்து ரூ. 900 என சம்பளம் பெற்றேன்,'' என்றார். விரைவில் இந்திய 'சீனியர்' அணியில் இடம் பெற காத்திருக்கிறார்.
'கனா' அனுபவம்
தமிழில் 2018ல் வெளியான 'கனா' படத்தில் கிரிக்கெட் வீராங்கனையாக நடித்துள்ளார் சஜனா. கடைசி பந்தில் சிக்சர் அடித்த இவரை, மும்பை பெண்கள் அணியின் 'போலார்டு' என அழைக்கின்றனர்.