Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/கோலி பாதி ரோகித் பாதி கலந்து செய்த கலவை சுப்மன் * ஜோஸ் பட்லர் கணிப்பு

கோலி பாதி ரோகித் பாதி கலந்து செய்த கலவை சுப்மன் * ஜோஸ் பட்லர் கணிப்பு

கோலி பாதி ரோகித் பாதி கலந்து செய்த கலவை சுப்மன் * ஜோஸ் பட்லர் கணிப்பு

கோலி பாதி ரோகித் பாதி கலந்து செய்த கலவை சுப்மன் * ஜோஸ் பட்லர் கணிப்பு

ADDED : ஜூன் 17, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
லண்டன்: ''கேப்டன் பதவியில் கோலி, ரோகித் சர்மாவின் கலவையாக சுப்மன் கில் இருப்பார்,''என ஜோஸ் பட்லர் தெரிவித்தார்.

இங்கிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் ஜூன் 20ல் லீட்சில் துவங்குகிறது. இந்திய கேப்டனாக இளம் சுப்மன் கில் 25, களமிறங்க உள்ளார். பிரிமியர் தொடரில், இவரது தலைமையில் குஜராத் அணிக்காக இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லர் விளையாடினார். இதனால் சுப்மன் அணுகுமுறை பற்றி தெரியும்.

இது குறித்து பட்லர் கூறியது:

சுப்மன் கல் அனைவரையும் கவரக்கூடிய இளம் வீரர். அமைதியான மனிதர். அளவோடு பேசுவார். களத்தில் அவ்வப்போது போராட்ட குணத்தை வெளிப்படுத்துவார். கோலி, ரோகித் சர்மாவின் கலவையாக இவரை பார்க்கலாம். கோலி தனது ஆக்ரோஷ குணத்தால் இந்திய அணியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தினார். மறுபக்கம் ரோகித் சர்மா மிகவும் 'கூலாக' செயல்படுவார். இருவருக்கும் இடையில் சுப்மன் கில்லை சேர்க்கலாம். இவர்களிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டிருப்பார். இருப்பினும் தனது 'ஸ்டைலில்' அணியை வழிநடத்துவார்.

கேப்டன், பேட்டர் என இரு பணிகளிலும் வேறுவிதமாக செயல்பட முயற்சிக்க வேண்டும். கேப்டன் பதவி இவரது பேட்டிங்கில் பாதிப்பு ஏற்படுத்திவிடக்கூடாது. பேட் செய்யும் போது பேட்டராக மட்டும் செயல்படுவது அவசியம். தலைமைபண்பில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

இந்தியாவில் கிரிக்கெட் மோகம் அதிகம். வீரர்கள் மிக விரைவில் நட்சத்திர அந்தஸ்து பெறுகின்றனர். இதை பிரிமியர் தொடரில் காணலாம். கோலி என்றால் 'கிங்', சுப்மன் என்றால் 'பிரின்ஸ்' என போற்றுகின்றனர். பிரிமியர் தொடரில் இரு சீசனில் கேப்டனாக இருந்த அனுபவம் சுப்மனுக்கு கைகொடுக்கும். டெஸ்டில் சச்சின், கோலி விளையாடிய 4வது இடத்தில் சுப்மன் களமிறங்க இருப்பது பெரிய விஷயம்.

இவ்வாறு பட்லர் கூறினார்

பிரதமருக்கு அடுத்து...

பட்லர் கூறுகையில்,''இந்தியாவில் பிரதமர் பதவிக்கு அடுத்து, மூன்று அல்லது நான்காவது செல்வாக்குமிக்க நபராக டெஸ்ட் அணி கேப்டனை கருதுகின்றனர். 140 கோடி மக்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வேண்டியிருக்கும். இதனால் சுப்மனுக்கு சவாலான பணி காத்திருக்கிறது,''என்றார்.

ராணா வாய்ப்பு

பும்ரா உடற்தகுதியில் பிரச்னை இருப்பதால், முதல் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் கூடுதல் வேகப்பந்துவீச்சாளராக ஹர்ஷித் ராணா சேர்க்கப்பட்டுள்ளார். இவர், இந்திய 'ஏ' அணியில் இடம் பெற்றிருந்தார். கே.எல்.ராகுல், கருண் நாயர், ஷர்துல் தாகூர் உடன் ஹர்ஷித் ராணாவும் நேற்று ரயில் மூலம் லண்டனில் இருந்து லீட்ஸ் சென்றார். அங்கு இந்திய வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

பட்டோடி பதக்கம்

டெஸ்ட் தொடருக்கு வழங்கப்படும் 'பட்டோடி' டிராபி'யின் பெயர், இம்முறை 'சச்சின்--ஆண்டர்சன் டிராபி' என மாற்றப்பட்டது. இந்திய ஜாம்பவான் பட்டோடி பெயர் நீக்கப்பட்டதற்கு கவாஸ்கர் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். சச்சின் சார்பிலும் பட்டோடியின் பெயரை சேர்க்கும்படி வலியுறுத்தப்பட்டது. இதையடுத்து, டெஸ்ட் தொடரில் வெற்றி பெறும் கேப்டனுக்கு பட்டோடி பெயரில் பதக்கம் வழங்கப்படும் என இங்கிலாந்து கிரிக்கெட் போர்டு அறிவித்துள்ளது.

சிங்கத்தின் குகையில்...

இந்திய அணியின் முன்னாள் வீரர் தினேஷ் கார்த்திக் கூறுகையில்,''இந்திய டெஸ்ட் அணியின் கேப்டனாக இருப்பதன் மகத்துவத்தை சுப்மன் கில் உணரவில்லை. அவர், சிங்கத்தின் குகையில் சென்று கொண்டிருக்கிறார். இங்கிலாந்து மண்ணில் சாதிப்பது எளிதல்ல. தற்போதைய இங்கிலாந்து அணியின் பவுலிங் பலவீனமாக இருப்பது நமக்கு சாதகம். அவர்களது பேட்டிங் வலுவாக உள்ளது. சுப்மன் தனது பேட்டிங்கில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ரன் மழை பொழிந்தால் தான் 'டிரஸ்சிங் ரூமில்' சக வீரர்களின் மரியாதையை பெற முடியும்,''என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us