Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/விளையாட்டு/கிரிக்கெட்/இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: கங்குலி கணிப்பு என்ன

இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: கங்குலி கணிப்பு என்ன

இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: கங்குலி கணிப்பு என்ன

இந்தியாவை சமாளிக்குமா பாகிஸ்தான்: கங்குலி கணிப்பு என்ன

ADDED : ஜூன் 01, 2024 10:54 PM


Google News
Latest Tamil News
மும்பை: ''உலக கோப்பை அரங்கில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா சிறப்பாக செயல்பட்டுள்ளது. 'டி-20' போட்டியில் சவால் கொடுக்கலாம்,'' என கங்குலி தெரிவித்தார்.

அமெரிக்கா, வெஸ்ட் இண்டீசில் 9வது 'டி-20' உலக கோப்பை தொடர் நடக்கிறது. வரும் 9ல் நியூயார்க்கில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. இதில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாதிக்க காத்திருக்கிறது.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கங்குலி கூறியது: 'டி-20' உலக கோப்பை வெல்ல இந்திய அணிக்கு பிரகாசமான வாய்ப்பு உள்ளது. ரோகித், கோலி, சூர்யகுமார், ரிஷாப், ஷிவம் துபே, ஹர்திக் பாண்ட்யா, பும்ரா என திறமையான வீரர்கள் இடம் பெற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும் சுதந்திரமாக எதற்கும் அஞ்சாமல் விளையாடினால், கோப்பை கைப்பற்றலாம். கூடுதலாக ஒரு பேட்டரை சேர்த்து, முதல் பந்தில் இருந்தே அதிரடியாக ஆட வேண்டும். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய கோலி அருமையான 'பார்மில்' உள்ளார். இவரும் ரோகித்தும் துவக்க வீரர்களாக களமிறங்க வேண்டும்.

சவாலான 20 ஓவர்

நியூயார்க் மைதான ஆடுகளம் பேட்டிங்கிற்கு ஒத்துழைக்கும். இங்கு பாகிஸ்தான் அணியை எதிர்கொள்ள இருக்கிறோம். உலக கோப்பை வரலாற்றில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஆமதாபாத்தில் நடந்த உலக கோப்பை போட்டியில் (50 ஓவர்) இந்திய அணி, பாகிஸ்தானை சுலபமாக வீழ்த்தியது. 50 ஓவர் போட்டியுடன் ஒப்பிடுகையில் 'டி-20' அரங்கில் பாகிஸ்தான் ஆபத்தானது. இம்முறை கடும் சவால் கொடுக்கும். இந்திய அணியை பொறுத்தவரை எதை பற்றியும் கவலைப்படாமல் இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் வெற்றியை வசப்படுத்தலாம்.

இவ்வாறு கங்குலி கூறினார்.

காம்பிர் சாதிப்பார்

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர் நியமனம் குறித்து கங்குலி கூறுகையில்,''இந்தியாவில் கிரிக்கெட் திறமைக்கு பஞ்சமில்லை. முன்னாள் இந்திய வீரர் ஒருவரை புதிய பயிற்சியாளராக நியமிப்பதே நல்லது. இப்பதவிக்கு விண்ணப்பிக்க கடந்த மே 27 தான் கடைசி தேதி. பி.சி.சி.ஐ., விரும்பினால், காலக் கெடுவை நீடிக்கலாம். பயிற்சியாளர் பதவிக்கு கவுதம் காம்பிர் விண்ணப்பித்தாரா என தெரியவில்லை. ஐ.பி.எல்., தொடரில் பயிற்சியாளராக அசத்தினார். கோல்கட்டா அணி கோப்பை வெல்ல முக்கிய காரணமாக இருந்தார். வெற்றி தாகம் கொண்டவர். இவருக்கு விருப்பம் இருந்தால், இந்திய அணியின் பயிற்சியாளராக நியமிக்கலாம். சிறந்த பயிற்சியாளராக ஜொலிப்பார்,'' என்றார்.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us